விவசாயிகள் அதிக மகசூல் பெற மண் பரிசோதனை கட்டாயம்!: மண்ணின் தன்மையை அறிந்து பயிரிடுவது அவசியம்
விவசாயிகள் அதிக மகசூல் பெற மண் பரிசோதனை கட்டாயம்!: மண்ணின் தன்மையை அறிந்து பயிரிடுவது அவசியம்
UPDATED : ஜூலை 09, 2026 01:15 PM
ADDED : ஜூலை 08, 2026 06:30 PM

ஊட்டி: 'நீலகிரியில் விவசாயிகள் அதிக மகசூல் பெற மண் பரிசோதனை செய்ய வேண்டும்,' என, தோட்டக்கலை துறை அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம், 25 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு போகத்தில், உருளைகிழங்கு, கேரட், முட்டைகோஸ், பீட்ரூட் பயிர் மற்றும் தேயிலை, காபி போன்ற தோட்ட பயிர்களும் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
சமீப காலமாக விளை நிலங்களில் ரசாயன உரங்களின் அதிக பயன்பாட்டால் மண் வளம் வெகுவாக பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. மண் வளத்தை பாதுகாக்கவும் மகசூலை அதிகரிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயிகளுக்கு அழைப்பு
அதில் முக்கியமாக, விவசாயிகள் மண் ஆய்வு கூடம் வாயிலாக தங்கள் மண்ணின் தன்மையை அறிந்து பயிரிட விவசாயிகள் முன் வர வேண்டும். இதற்காக, விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மண் வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மண்ணில் உள்ள தழை, மணி சாம்பல் சத்துக்கள் கந்தகம் மற்றும் கார அமில நிலை, அங்கக கரிம சதவீதம் மற்றும் நுண்ணுாட்ட சத்துக்களின் அளவு ஆகியவற்றை, மண் ஆய்வில் அறிந்து கொள்ள, மண் வள அட்டையை விவசாயிகள் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் அடிப்படையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மண் வள அட்டையில் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய சமச்சீர் உர அளவையும், கார அமில தன்மையின் நிவர்த்திக்கான பரிந்துரையும் கொடுக்கப்படுகிறது.
பசுந்தாள் உரத்தால் பயன்
அதன்படி, கடந்த, 2025ம் ஆண்டில் ஆடாசோலை பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு, அங்கக கரிமத்தை உயர்த்துவதற்கு உயிர் உரங்கள், அங்கக இடுபொருட்கள் மற்றும் பசுந்தாள் உரங்கள் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, நடப்பாண்டு, அந்த நிலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது, அந்த நிலத்தின் சத்து, 0.48 சதவீதத்திலிருந்து 1.56 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதினால் மண் வளம் மேம்படுவதோடு அதிக மகசூலும் கிடைப்பது தெரியவந்துள்ளது. இதுபோல, அனைத்து விவசாயிகளும் பயன் பெற வேண்டும்.
தோட்டக்கலை இணை இயக்குனர் அனிதா கூறுகையில், '' நீலகிரி விவசாயிகள் மண்ணின் நலத்தை பாதுகாத்து அதை மேம்படுத்தவும், அதிக அளவு மகசூல் பெறவும், தரமான விளை பொருட்களை அறுவடை செய்யவும், வருடத்திற்கு இரண்டு முறை பயிர் அறுவடைக்கு பின்பு மண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஊட்டி ரோஜா பூங்கா வளாகத்தில் உள்ள மண் ஆய்வு கூடத்தை நேரிலோ அல்லது தொலை பேசியிலோ (0423-2440125) அணுகி பயன் பெறலாம். இக்குழுவில், வேளாண்மை அலுவலர் சுதா, உதவி வேளாண்மை அலுவலர் ஜோதி குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் சரவணன் உட்பட பலர் உள்ளனர்,'' என்றார்.
