/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'லாங்வுட்' சோலையில் இயற்கை பாதுகாப்பு முகாம்
/
'லாங்வுட்' சோலையில் இயற்கை பாதுகாப்பு முகாம்
ADDED : மே 01, 2024 10:49 PM
கோத்தகிரி : 'கோத்தகிரி லாங்வுட் சோலை, 50 ஆயிரம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது,' என, தெரிவிக்கப்பட்டது.
கோத்தகிரி 'லாங்வுட்' சோலையில், நீலகிரி மாவட்ட வனத்துறை; கோவை ஓசை அமைப்பு சார்பில், இயற்கை பாதுகாப்பு முகாம் நடந்தது.
கோத்தகிரி வனச்சரகர் செல்வராஜ் துவக்கி வைத்தார். மாவட்ட வன அலுவலர் கவுதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் நீர் ஆதாரங்கள் குறித்து விளக்கினார்.
அதில், 'லாங்வுட்' சோலை பாதுகாப்பு குழுவின் செயலர் ராஜூ, சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்டு பேசியதாவது:
லாங்வுட் சோலை, 18 கிராமங்களை சேர்ந்த, 50 ஆயிரம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதுடன், பல்லுயிர் சூழல் மையமாக உள்ளது. கோத்தகிரி நகரின் 'மைக்ரோ கிளைமேட் ' எனக்கூடிய காலநிலையும் நிர்ணயிக்கிறது.
பல விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் வாழிடமாக அமைந்துள்ளது. இச்சோலை பாதுகாப்புக்குழு, வனத்துறைக்கும் பொது மக்களுக்கும் இடையே உறவு பாலம் அமைத்து உள்ளது.
கடந்த, 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த பாதுகாப்புக்குழு மக்களிடையே காடுகளை காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பூர், கரூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த இயற்கை முகாமில் பங்கேற்றனர். முகாமுக்கான, ஏற்பாடுகளை கோவை ஓசை அமைப்பின் இயக்குனர் காளிதாஸ் செய்திருந்தார்.
கவிஞர் அவை நாயகன் அனைவரையும் வரவேற்றார். சென்னை ஆனந்த் குமார் நன்றி கூறினார்.

