/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறப்பு மலை ரயிலில் கூட்டம் அதிகரிப்பு
/
சிறப்பு மலை ரயிலில் கூட்டம் அதிகரிப்பு
ADDED : மார் 29, 2024 10:19 PM

குன்னுார்;கோடை சீசனையொட்டி துவக்கப்பட்ட, ஊட்டி சிறப்பு மலை ரயிலில் கூட்டம் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு கோடை சீசனுக்காக வரும் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
நாள்தோறும் குன்னுாரில் இருந்து, ஊட்டிக்கு, 'காலை, 7:45 மணி, பகல் 12:35 மணி, மாலை 4:00 மணி; ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு காலை, 9:15 மணி, பகல் 12:15 மணி, மாலை 5:30 மணி,' என மலை ரயில் இயக்கப்படுகிறது.
மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை, 7:10 மணிக்கு நான்கு பெட்டிகளுடன் புறப்படும் மலை ரயில், குன்னுாரில் நிறுத்தப்பட்டு, கூடுதலாக ஒரு பெட்டி இணைத்து, ஊட்டிக்கு காலை, 10:40 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.
ஊட்டியில் இருந்து, 2:00 மணிக்கு 5 பெட்டிகளுடன் புறப்படும் மலை ரயில் குன்னுாரில் நிறுத்தி, 4 பெட்டிகளுடன் மட்டும் மேட்டுப்பாளையம் செல்கிறது.
சிறப்பு ரயில் இயக்கம்
இந்நிலையில், கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகரிப்பதால் நேற்று முதல் சிறப்பு ரயில் இயக்கம் துவங்கியது ஜூலை, 1ம் தேதி வரை, வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கட் கிழமை வரை, 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.
நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து, 3 பெட்டிகளில் 120 பயணிகளுடன் வந்த சிறப்பு மலை ரயிலில், குன்னூரில் இருந்து கூடுதலாக 2 பெட்டிகள் இணைத்து, 210 சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சென்றது. இதே போல், ஊட்டி- கேத்தி இடையே, வெள்ளி முதல் திங்கள் வரை, 4 நாட்களுக்கு,'காலை 9:45 மணி, காலை 11:30 மணி, மாலை 3:00 மணி,' என, சுற்று சிறப்பு ரயில் இயக்கமும் துவங்கியது. ஹில்குரோவ் ரன்னிமேடு உட்பட ரயில் நிலையங்களில் கேண்டீன் உட்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்த சுற்றுலா- பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்

