/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பசுமையை பாதுகாத்தால் எதிர்காலம் நலமாகும்' '-மிஷன் இயற்கை' நிகழ்ச்சியில் அறிவுரை
/
'பசுமையை பாதுகாத்தால் எதிர்காலம் நலமாகும்' '-மிஷன் இயற்கை' நிகழ்ச்சியில் அறிவுரை
'பசுமையை பாதுகாத்தால் எதிர்காலம் நலமாகும்' '-மிஷன் இயற்கை' நிகழ்ச்சியில் அறிவுரை
'பசுமையை பாதுகாத்தால் எதிர்காலம் நலமாகும்' '-மிஷன் இயற்கை' நிகழ்ச்சியில் அறிவுரை
ADDED : மார் 12, 2025 10:26 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே அம்பலவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில், பசுமை அமைச்சரவை, பசுமை தணிக்கை மற்றும் பசுமை திட்டத்தின் கீழ், 'மிஷன் இயற்கை' எனும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.
அதில், முதல் கட்டமாக பள்ளி வளாகத்தை சுற்றிலும், 500 மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பத்மபிரியா வரவேற்றார்.
பிதர்காடு வனச்சரக உதவி வன பாதுகாவலர் சாய்சரண்ரெட்டி துவக்கி வைத்து பேசுகையில்,''வனங்கள் மற்றும் மரங்கள், அழிக்கப்பட்டு கட்டட காடுகளாக மாற்றம் செய்ததால், குளுமையான நீலகிரி மாவட்டம் தற்போது வெப்பத்தில் கொதிக்கிறது. இதுபோன்ற நிலை மாற மாணவர்கள் அனைவரும், வனத்தை பாதுகாத்திடவும், மரங்களை நட்டு வளர்க்கவும் முன் வர வேண்டும்,''என்றார்.
உதவி வன பாதுகாவலர் அருள்மொழி வர்மன் பேசுகையில், ''மரங்கள் கார்பனை சேகரித்து, பசுமை வளத்தை மேம்படுத்தி உயிர்கள் வாழ உதவி செய்கிறது. அனைத்து இடங்களிலும் மரங்கள் நடுவதை தவிர்த்து, எந்த இடங்களில் மரங்கள் உள்ளதோ அந்த பகுதிகளில், உள்ளூர் மரங்களை நடவு செய்து வளர்க்க வேண்டும்.
பசுமை புல்வெளிகளை அழித்ததால் தற்போது, ஒட்டகச்சிவிங்கி எனும் விலங்கினம் காணாமல் போய், தற்போது மேலை நாடுகளில் இருந்து வாங்கி பல கோடி ரூபாய் செலவில் அதனை வளர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.
எனவே, மாணவர்கள் பசுமை வளத்தை மேம்படுத்த, முன் வந்தால் மட்டுமே எதிர்கால சமுதாயம் நலமுள்ளதாக வாழ முடியும்,'' என்றார். தொடர்ந்து, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராபர்ட் மரம் வளர்ப்பதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விளக்கி பேசினார்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதுடன், திட்ட மாணவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் மகாலிங்கம் நன்றி கூறினார்.