/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கீழ்குந்தா மக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கனவு நனவானது! நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.10.32 கோடி ஒதுக்கீடு
/
கீழ்குந்தா மக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கனவு நனவானது! நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.10.32 கோடி ஒதுக்கீடு
கீழ்குந்தா மக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கனவு நனவானது! நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.10.32 கோடி ஒதுக்கீடு
கீழ்குந்தா மக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கனவு நனவானது! நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.10.32 கோடி ஒதுக்கீடு
ADDED : செப் 06, 2024 03:00 AM
மஞ்சூர்;கீழ்குந்தா பேரூராட்சி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 10.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டதால் விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சியில் மஞ்சூர் பஜார், மஞ்சூர் ஹட்டி, கரியமலை, பாக்கோரை, கீழ்குந்தா, மட்டக்கண்டி, துானேரி, ஓணிக்கண்டி, குந்தாபாலம், முள்ளிமலை, காந்திபுரம், பெரியார் நகர், கெச்சிகட்டி, தொட்டக்கம்பை, கெத்தை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய, 15 வார்டுகள் உள்ளன. 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
குடிநீருக்கு திண்டாட்டம்
கீழ்குந்தா பேரூராட்சிக்கு அம்மக்கல், கட்லாடா உள்ளிட்ட நீராதாரங்கள் மூலம் ஆங்காங்கே அமைக்கப்பட்ட மேல்நிலை தொட்டியில் சேமிக்கப்படும் தண்ணீர் வார்டுகளுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது.
கால போக்கில்,'நீராதார பகுதிகளில் ஆக்கிரமிப்பு, பராமரிப்பு பணியில் தொய்வு, மழை சமயங்களில் அடித்துவரப்பட்ட சேறும், சகதி செக்டேம்களில் நிறைந்து துார்வாரப்படாமல் விட்டது,' உள்ளிட்ட காரணங்களால் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், வறட்சி சமயங்களில் வார்டுகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. வார்டு மக்கள் ஊற்றுநீரை தேடி காலி குடங்களுடன் அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். சில வார்டுகளில் கிணறு அமைத்து கொடுத்தாலும் அந்த குடிநீரை பயன்படுத்த முடிவதில்லை. இதனால், 'கீழ்குந்தா பேரூராட்சி மக்கள் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்,' என, கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
கீழ்குந்தா பேரூராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மஞ்சூர் அருகே குந்தாபாலம் சிவன் கோவில் அருகே, குந்தா - ஒசஹட்டி நீராதாரத்திலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீரை அங்கு தடுப்பணை கட்டி தண்ணீர் சேமிக்கப்படும் வகையில், கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகம் புதிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயாரித்தது.
பின், மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 'குந்தா - ஒசஹட்டி' கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, 10. 32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மாநில அரசு உத்தரவிட்டது.
பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முகமது ரிஸ்வான் கூறுகையில், ''கீழ்குந்தா பேரூராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குந்தா - ஒசஹட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, 10.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கையில் படி, தடுப்பணை ஏற்படுத்தி தேவையான இடங்களில், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, அங்கு தண்ணீர் சேமித்து வார்டுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. தவிர, பழைய குடிநீர் குழாய்கள் அனைத்து மாற்றப்பட்டு புதிய குழாய்கள் அமைக்கப்படுகிறது.
டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரரிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டது. விரைவில் பணிகள் துவக்கப்படும்.'' என்றார்.