ADDED : ஜூன் 18, 2026 02:20 PM

பந்தலுார்: ‘மாநில எல்லையில் வாழும் பழங்குடி மக்கள் கேரளாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே எருமாடு குதிரம்பம் பழங்குடியின கிராமத்தில், கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
டாக்டர் சவுந்திரபாண்டியன் பேசுகையில், ‘‘பழங்குடியின மக்கள் தங்கள் குடியிருப்புகள் மற்றும் சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும். நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பதுடன், உடலையும் சுத்தமாக வைத்து கொள்வதும் முக்கியம். சிறு காயங்கள் ஏற்பட்டாலும் அதற்கு உரிய சிகிச்சை பெற வேண்டும். மாறாக அப்படியே விட்டால் நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தும். சளி, காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் நாடி சிகிச்சை பெற்று கொள்ளலாம்,’’ என்றார்.
சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன் பேசுகையில்,‘‘தற்போது கேரளா மாநிலத்தில் நிபா உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து வருகிறது. கீழே கிடக்கும் பழங்கள்; பறவைகள், விலங்குகள் கடித்த காய் மற்றும் பழங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மாநில எல்லையில் உள்ள கேரளாவிற்கு செல்வதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். அங்கு சென்று வந்தால், கை, கால்களை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் விற்பனை செய்யப்படும் பழ வகைகளை வாங்கி வந்து உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்,’’என்றார். நிகழ்ச்சியில், ஆஷா செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
