/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெள்ளேரி -அயனிபிறா சாலை சீரமைக்க நடவடிக்கை
/
வெள்ளேரி -அயனிபிறா சாலை சீரமைக்க நடவடிக்கை
ADDED : மே 09, 2024 11:38 PM
பந்தலுார்:பந்தலுார் வெள்ளேரி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே, நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளேரி -அயனிபிறா சுற்று வட்டார பகுதிகளில், பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். தமிழக - கேரள எல்லையில் உள்ள இப்பகுதியில், ஒரு பக்கம் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது.
இங்குள்ள சாலையை சீரமைக்க கடந்த, 2022 ஆம் ஆண்டு அதிகாரிகள் ஆய்வு செய்து, திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டது.
ஆனால், இந்த சாலைக்கு பதில் இதனை ஒட்டிய வேறு ஒரு சாலையை தார் சாலையாக சீரமைத்தனர். இது குறித்த புகாரை தொடர்ந்து, அங்குள்ள சமதளமாக சாலையை மட்டும் சீரமைத்தனர்.
மேட்டுப்பாங்கான பகுதி அப்படியே விடப்பட்டதால், தற்போது வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் கடந்த, 7-ம் தேதி செய்தி வெளியானது.
தொடர்ந்து கூடலுார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார் மற்றும் நந்தகுமார், பணி மேற்பார்வையாளர் இப்ராகிம் உள்ளிட்டோர் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் கூறுகையில், ''சாலை சீரமைப்பு குறித்து அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்படும். அவரின் நடவடிக்கைக்கு பின்னர் சாலை சீரமைக்கப்படும்,'' என்றார்.