/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நள்ளிரவு முதல் காலை வரை கனமழை மின் உற்பத்திக்கான அணைகளின் நீர்மட்டம் உயர்வு
/
நள்ளிரவு முதல் காலை வரை கனமழை மின் உற்பத்திக்கான அணைகளின் நீர்மட்டம் உயர்வு
நள்ளிரவு முதல் காலை வரை கனமழை மின் உற்பத்திக்கான அணைகளின் நீர்மட்டம் உயர்வு
நள்ளிரவு முதல் காலை வரை கனமழை மின் உற்பத்திக்கான அணைகளின் நீர்மட்டம் உயர்வு
ADDED : மே 23, 2024 11:40 PM

ஊட்டி:ஊட்டியின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு முதல் காலை வரை கனமழை பெய்தது.
கேரளாவின் தெற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால். நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கன மழை பெய்யும், என,சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்துள்ளது.
நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, அதிக பட்சமாக கெத்தை, 10 செ.மீ., கோடநாடு, 11 செ.மீ., குந்தா, 9 செ.மீ., குன்னுார், 7 செ.மீ., மழை பெய்துள்ளது. தவிர, பெரும்பாலான பகுதிகளில், 5 செ.மீ., க்கு மேல் மழை பெய்துள்ளது. கன மழைக்கு மஞ்சூர் - கிண்ணக்கொரை சாலை, கோரகுந்தா, அப்பர்பவானி சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி தாசில்தார் சரவணன் கூறுகையில், ''ஊட்டியில் காந்தளில் ஒரு வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்தது. புதிய அக்ரஹாரம் பகுதியில் வீடுகளில் மழை நீர் புகுந்தது. நகராட்சி ஊழியர்கள் சென்று வெளியேற்றினர். ேஹாபர்ட், எட்டின்ஸ் சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் பவர் ஷா உதவியுடன் மரத்தை அறுத்து அகற்றிய பின், போக்குவரத்து சீரானது. பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் வருவாய் துறை ஊழியர்கள் ஈடுபட்டுஉள்ளனர்,'' என்றார்.
கண்காணிப்பு
பேரிடர் தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு துறை சார்பில் பர்லியார், குஞ்சப்பனை, கூடலுார் பகுதிகளில் மொபைல் வாகனத்தில் தீயணைப்பு துறை ஊழியர்கள், 24 மணி நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
'பொதுமக்கள் தங்களது பகுதியில் பாதிப்பு இருந்தால் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்து நிவாரண முகாம்களில் தங்கலாம்,' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மழைக்கு நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துஉள்ளதால், குந்தா, கெத்தை, அவலாஞ்சி, எமாரல்டு அணைகளுக்கு வினாடிக்கு, 100 முதல் 150 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அப்பர்பவானி, பைக்காரா, போர்த்தி மந்து உள்ளிட்ட அணைகளிலும் நீர் மட்டும், 12 அடிவரை உயர்ந்துள்ளது.