/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனத்தில் வேகமாக வளரும் புற்கள் எவை?
/
வனத்தில் வேகமாக வளரும் புற்கள் எவை?
ADDED : ஜூன் 26, 2024 09:57 PM
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்ட வனப்பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட புல் வகைகளை நடவு செய்து ஆய்வு மேற்கொள்ளும் பணிக்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளது.
தமிழக வனப்பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட புல் வகைகள் வளர்கின்றன. வனப்பகுதிகளில் பார்த்தீனியம், லண்டனா உள்ளிட்ட அந்நிய களைச்செடிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால், வனப்பகுதிகளில் புல் வகைகள் வளரும் பரப்பளவு, குறைந்தது.
வனப்பகுதியில் யானை, மான், வரையாடு, காட்டெருமை, போன்ற வன விலங்குகளின் உணவு தேவையில், புற்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. புற்களின் பரப்பளவு குறைந்து கொண்டே வருவதால், யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் உணவு தேவை அதிகரித்தது.
இதை பூர்த்தி செய்ய, தமிழக அரசின் வனத்துறை சார்பில், தமிழ்நாடு உயிர் பன்முகத்தன்மை மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், ஜப்பான் நாட்டின் சர்வதேச கூட்டுறவு கழக முகமை நிதியுதவியுடன், தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில், சுமார் 520 எக்டேர் அளவுக்கு புல் வகைகளை வளர்க்க முடிவு செய்யப்பட்டது.
இதன் ஒருபகுதியாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கோவை வனக்கோட்டத்தில் உள்ள 7 வனச்சரகங்களை சேர்ந்த வனத்துறை பணியாளர்களுக்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புற்கள் நடப்பட உள்ளன.
இதுகுறித்து, வனப்பொருட்கள் மற்றும் வன உயிரியல் துறையின் தலைவர் பரணிதரன் கூறியதாவது:
சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டையில் 2 ஏக்கர் அளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட புல் வகைகளை நடவு செய்ய உள்ளோம். அதற்காக அந்த இடத்தில் உள்ள களை செடிகளை அகற்றும் பணி துவங்க உள்ளது. அதன் பின்பு புற்கள் நடவு செய்யப்படும். பின் புற்களில் எந்த வகை மிகவும் வேகமாக வளர்கிறது, வறட்சியை தாங்கி வளர்கிறது.
புற்களின் தேவைகளை கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு தேவைகளை நிறைவேற்றுதல் போன்ற ஆய்வுகள் செய்ய உள்ளோம். அதன் பின் வனப்பகுதிகளுக்கு ஏற்றவாறு, அந்தந்த பகுதிகளில் வளரும் புல் வகைகளை இனம் கண்டறிந்து வனப்பகுதிகளில் புற்கள் நடவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.---