/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்: ஒருவர் கைது
/
காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்: ஒருவர் கைது
காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்: ஒருவர் கைது
காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்: ஒருவர் கைது
ADDED : ஆக 10, 2024 03:19 AM

கூடலுார்;கூடலுார் அருகே, வாழை தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி, காட்டு யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இடத்தின் உரிமையாளரை வனத்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் ஸ்ரீமதுரை வடவயல் பகுதியில் கடந்த, 7ம் தேதி, பாலகிருஷ்ணன் என்பவரின் வாழை தோட்டத்துக்குள், ஆண் காட்டு யானை நான்கு கால்களும் சேற்றில் புதைந்த நிலையில் உயிரிழந்து கிடந்தது.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடலை ஆய்வு செய்தனர். ஆய்வில், அதன் வாய் பகுதியில் கம்பி இருப்பது தெரியவந்தது.
சேற்றில் இருந்து மீட்கப்பட்ட காட்டு யானையின் உடலை, கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதில், காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக, வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான இடத்தின் உரிமையாளர் பாலகிருஷ்ணனை தேடிவந்தனர்.
இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு கூடலுார் வன அலுவலர் அலுவலகத்தில் வனத்துறை அதிகாரிகளிடம் சரணடைந்தார்.
வனச் சரகர் ராதாகிருஷ்ணன் அவரை கைது செய்து, வாழை தோட்டத்தில் மின்வேலி அமைக்க பயன்படுத்திய பேட்டரி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை நேற்று பறிமுதல் செய்தார். அப்பகுதியில் உள்ள பிற மின் வேலிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

