தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் பதிவு செய்த... 45 ஆயிரம் விவசாயிகள்!:மானியத்தில் அறுவடைக்கான இயந்திரங்களை பெற வாய்ப்பு
தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் பதிவு செய்த... 45 ஆயிரம் விவசாயிகள்!:மானியத்தில் அறுவடைக்கான இயந்திரங்களை பெற வாய்ப்பு
UPDATED : ஜூலை 02, 2026 03:24 AM
ADDED : ஜூலை 01, 2026 06:24 PM

ஊட்டி: நீலகிரியில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் பதிவு செய்த, 45 ஆயிரம் விவசாயிகள் மானியத்தில் அறுவடைக்கான இயந்திரங்களை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரியில் தேயிலை விவசாயம் மற்றும் மலை காய்கறி விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி, வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகளிடையே, இயந்திரமயமாக்கலை அதிகரிக்க தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதன்படி, நில தயாரிப்பு, விதைப்பு, பயிர்பாதுகாப்பு, அறுவடை, அறுவடைக்கு பிந்தைய தொழில் நுட்ப மேலாண்மை மற்றும் சரியான நேரத்தில் மதிப்பு கூட்டல் போன்ற பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்ள உதவும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
எரி சக்தி தொழில் நுட்பம் நீலகிரியில், 2.54 லட்சம் எக்டர் நிலங்கள் உள்ளன. தோட்ட பயிர்களான தேயிலை , காபி மற்றும் பாக்கு போன்றவை பயிரிடப்பட்டு வருகின்றன. விவசாயிகள் பயனடையும் வகையில், வேளாண்மை பொறியியல் துறை விவசாயிகளுக்கு மண் பாதுகாப்பு, புதிய நீர்ப்பாசன ஆதாரங்களை உருவாக்குதல் மற்றும் பாசனத்திற்காக தண்ணீரை இறைப்பதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களை பின்பற்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, முதற்கட்டமாக, தேயிலை வாரியத்தில் பதிவு செய்த விவசாயிகள், 45 ஆயிரம் பேர், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மற்றும் வேளாண் இயந்திர மயமாக்குதல்கான துணை இயக்க திட்டத்தின் கீழ் , அறுவடைக்கான தொழில்நுட்ப இயந்திரங்கள் மானியத்தில் பெற தகுதியானவர்களாக உள்ளனர். அவர்களுக்கு மானியத்தில் பல்வேறு இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.
வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், 'இத்திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் சிறு, குறு விவசாயிகளுக்கு, 70 சதவீதம் மானியம், இதர விவசாயிகளுக்கு , 40 சதவீதம் மானியத்தில், தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் பயனடையும் வகையில் ஏற்கனவே , பல கோடி ரூபாய் மானியத்தில் விவசாயிகளுக்கு தேவையான தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்தவர்களை தவிர, இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையை அணுகி பயன்பெறலாம்,' என்றனர்.
