/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடை சீசனில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை தேவை! அணைகளில் தண்ணீர் குறைவதால் சிக்கல்
/
கோடை சீசனில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை தேவை! அணைகளில் தண்ணீர் குறைவதால் சிக்கல்
கோடை சீசனில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை தேவை! அணைகளில் தண்ணீர் குறைவதால் சிக்கல்
கோடை சீசனில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை தேவை! அணைகளில் தண்ணீர் குறைவதால் சிக்கல்
ADDED : பிப் 07, 2024 10:39 PM

ஊட்டி : ஊட்டி நகராட்சிக்கான நீராதார அணைகளில், தண்ணீர் படிப்படியாக குறைந்து வருவதால், கோடையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சியில் உள்ள, 36 வார்டுகளில், 2 லட்சத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. தவிர, புற்றீசல் போல் அனைத்து பகுதிகளிலும் காட்டேஜ்கள் பெருகி உள்ளன. இவற்றுக்கு உள்ளூரில் உள்ள ஒன்பது நீர் தேக்கங்களில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
கடந்தாண்டு ஏமாற்றிய மழை
கடந்தாண்டு எதிர்பார்த்த அளவு பருவ மழை பெய்யவில்லை. இதனால், மாவட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள அணைகள், தடுப்பணைகளில் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது.
நடப்பாண்டு துவக்கத்தில் நிலவிய பனிபொழிவை அடுத்து, வறட்சியான காலநிலை நிலவுகிறது. நீலகிரியில் ஜன., முதல் ஏப்., வரையிலான கோடை மழை, 30 செ.மீ., ஆகும். இந்த மழை, 15 செ.மீ., அளவுக்கு பெய்தால் மட்டுமே நடப்பாண்டு கோடை காலத்தில் நிலவும் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும்.
தண்ணீர் இருப்பு நிலவரம்
நேற்றைய நிலவரப்படி, ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள பார்சன்ஸ்வேலி, 50 அடிக்கு 21 அடி; மார்லிமந்து, 23--10; டைகர் ஹில், 39-30; கோரிசோலா, 35--25; அப்பர் தொட்டபெட்டா, 31--20; லோயர் தொட்டபெட்டா, 14--12; லோயர் கோடப்பமந்து, 13--12; ஓல்டு ஊட்டி, 6--5; கிளன்ராக், 7-6 அடி வரை அணைகளில் தண்ணீர் இருப்பு உள்ளது.
ஊட்டியில், பெரும்பாலான வார்டுகளுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள பார்சன்ஸ்வேலி அணை, மொத்த அடியான, 50 அடியில், கடந்தாண்டில் இதே நேரத்தில், 26 அடி வரை தண்ணீர் இருப்பு இருந்தது.
தற்போது, 21 அடி வரை தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்தாண்டை ஒப்பிடும் போது, நடப்பாண்டில், 5 அடி வரை தண்ணீர் குறைந்துள்ளது. பிற அணைகளிலும் கடந்தாண்டை விட, ஒரு அடி முதல், 4 அடி வரை தண்ணீர் குறைந்துள்ளது. தொடர்ந்து வறட்சியான கால நிலை நிலவும் பட்சத்தில் இருப்பில் உள்ள தண்ணீர் மேலும் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.
கோடை சீசன் சிக்கலாகும்
ஊட்டியில் ஏப்-, மே மாதங்களில் கோடை சீசன் நடக்க உள்ள நிலையில், மார்ச் இரண்டாவது வாரத்திலேயே, கோடை வெப்பம் காரணமாக, சமவெளி மற்றும் பிற மாநில சுற்றுலா பயணிகள் கணிசமாக வர வாய்ப்புள்ளது. ஏப்., மற்றும் மே மாதங்களில் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும்.
அந்த சமயங்களில் குடிநீர் தேவை வழக்கத்தை விட அதிகரிக்க கூடும் என்பதால், நகராட்சி நிர்வாக தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டி கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில்,''கடந்தாண்டை பார்க்கும் போது பார்சன்ஸ் வேலி, மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலா உள்ளிட்ட முக்கிய நீராதாரங்களில் தண்ணீர் குறைந்துள்ளது.
கோடை சீசனில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என்றார்.

