/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராணுவ மையத்தில் சாகசம்: அசத்திய வீரர்கள்
/
ராணுவ மையத்தில் சாகசம்: அசத்திய வீரர்கள்
ADDED : டிச 05, 2025 08:04 AM

குன்னுார்: குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில், ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
குன்னுார் அருகே வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையம், 'மெட்ராஸ் ரெஜிமென்ட்' பெயரில், 1758ல், 100 சிப்பாய்களை கொண்டு துவங்கப்பட்ட காலாட்படை மையமாகும். மேஜர் லாரன்ஸ் முதல் தலைவர். பிரிட்டீஷ் வீரர்களுடன், இந்தியர்களும் இந்த படைப்பிரிவில் இருந்தனர். தற்போது வரை, பல்வேறு போர்களில் தனது வெற்றியை நிலைநாட்டியுள்ளது.
சுதந்திரத்திற்கு பிறகு, நம் நாட்டின் முக்கிய ரெஜிமென்ட் ஆக மாறி, 21 பட்டாலியன் பிரிவுகள், தற்போது, 28 பிரிவுகளாக உயர்ந்துள்ளது.
கடந்த, 2 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பயிற்சி பெறும் அக்னி வீரர்கள் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு, 4 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுகின்றனர்.
இந்நிலையில், இங்கு நேற்று முன்தினம், 6வது அக்னி வீரர்கள் குழுவினர் பயிற்சி முடித்து, சத்திய பிரமாணம் எடுத்து கொண்டு எல்லையில் பணிக்கு செல்ல ஆயத்தமாகினர். இதனையொட்டி, நேற்று முன்தினம் இரவு, அக்னி வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் காலாட்படை ராணுவ வீரர்களின் சாகசம் இடம் பெற்றது.
அதில், கேரள தற்காப்பு கலையான களரி, வாள் சண்டை, கம்பு சண்டை உட்பட பல்வேறு வீர சாகச நிகழ்ச்சிகளில், செண்டை மேளம் முழங்கியதற்கு ஏற்ப, தீ வளையத்திற்குள் ராணுவ வீரர்கள் பாய்ந்து சாகசத்தில் ஈடுபட்டனர்.
வாயில் இருந்த மண்ணெண்ணெயை ஊதி, தீ பிளம்பாக மாற்றிய நிகழ்வு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

