/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நுாற் புழுக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த அறிவுரை
/
நுாற் புழுக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த அறிவுரை
ADDED : ஜன 02, 2024 10:42 PM
ஊட்டி:' மலை மாவட்டத்தில் பயிர் சுழற்சி முறையை மேற்கொள்வதன் மூலம் நுாற் புழுக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்,' என, தோட்டக்கலை துறை அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரியில், கேரட், உருளைகிழங்கு போன்ற காய்கறி பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றனர்.
இப்பயிர்களை தனிப்பயிராக தொடர்ந்து ஒரு நிலத்தில் பயிரிட்டு வரும் காரணத்தினால் அவற்றில் நுாற்புழு தாக்குதல் அதிக அளவு காணப்படுகிறது.
இதன் காரணமாக மகசூல் கணிசமான அளவு குறைவதுடன் பொருட்களின் தரமும் குறைந்து காணப்படுகிறது.
கேரட் பயிரில் 'மெலாடோகைன்' என்ற வேர் முடிச்சு நுாற்புழுவின் தாக்கமும், உருளைகிழங்கு பயிரில் 'குளோபோடீரா ரோஸ்டாகைனன்சிஸ்' மற்றும் 'குளோபோடீராபாலிடா' என்ற வகைப்பாடுடைய முட்டைக்கூடு நுாற்புழுவின் தாக்கமும் ஏற்படுகிறது.
நுாற்புழுவின் தாக்குதல் காரணமாக இப்பயிர்களில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும், வேகமான முதிர்ச்சி மற்றும் பக்கவாட்டு வேர்கள் பெருகி காணப்படுகிறது.
இதில், உருளைகிழங்கு பயிர் பூக்கும் பருவத்தில் தாவரத்தின் வேரில் வெள்ளை, மஞ்சள் நிறமுடைய முதிராத நுாற்புழுக்கள் காணப்படுகிறது.
கட்டுப்படுத்தும் முறை:
தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிதா கூறுகையில்,''பயிர் சுழற்சி முறையை மேற்கொள்வதன் மூலம் நுாற்புழுக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம். உருளைகிழங்கு பயிரில் ஊடு பயிராக கடுகு, பூண்டு, போன்ற பயிர்களை பயிரிடுவதன் மூலம் நுாற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
மேலும், உருளைகிழங்கில் எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களான குப்ரிஸ்வர்ணா, குப்ரி சயாத்ரி போன்றவற்றை பயிரிடலாம். வேப்பம் புண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு, 100 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு, 100 கிலோ இடுவதன் மூலம் நுாற்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம். விவசாயிகள் அதிக மகசூல் பெற தோட்டக்கலை தெரிவித்த வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்,'' என்றார்.