/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அன்னமலை முருகன் கோவில் பெருவிழா கோலாகலம்; காவடி ஏந்தி பக்தர்கள் பரவசம்
/
அன்னமலை முருகன் கோவில் பெருவிழா கோலாகலம்; காவடி ஏந்தி பக்தர்கள் பரவசம்
அன்னமலை முருகன் கோவில் பெருவிழா கோலாகலம்; காவடி ஏந்தி பக்தர்கள் பரவசம்
அன்னமலை முருகன் கோவில் பெருவிழா கோலாகலம்; காவடி ஏந்தி பக்தர்கள் பரவசம்
ADDED : ஏப் 14, 2025 09:44 PM

மஞ்சூர்; மஞ்சூர் அருகே பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோவில், 36ம் ஆண்டு காவடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி ஏந்தி தரிசனம் செய்தனர்.
மஞ்சூர் அருகே அன்னமலையில் புகழ்பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில், 'நீலகிரி மாவட்டத்தின் பழனி' என, பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கிருத்திகை மற்றும் காவடி திருவிழா மிகவும் விசேஷம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்நிலையில், நடப்பாண்டு அன்னமலை முருகன் கோவிலில், 48ம் ஆண்டு நிறைவு விழா; பஞ்சலோக உற்சவமூர்த்தி பவனி விழா; உலக நல யாக விழா; 36ம் ஆண்டு காவடி பெருவிழா ஆகியவை நேற்று நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வாஸ்து வழிபாடு, மகா கணபதி வேள்வி, நவகிரக வேள்வியுடன் திருவிழா துவங்கியது.
இதை தொடர்ந்து கொடியேற்றம், காப்பு கட்டுதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு, 8:00 மணியளவில் வான வேடிக்கை நடைபெற்றது.
காவடி திருவிழா கோலாகலம்
இதை தொடர்ந்து முக்கிய நிகழ்வான காவடி திருவிழா நேற்று காலை அன்னமலை அடிவார விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கியது. 'பால் காவடி, பன்னீர் காவடி, சந்தன காவடி,' என, பல்வேறு வகையான காவடிகளை ஏந்தி, ஓணிக்கண்டி, கீழ்குந்தா, கொட்டரக்கண்டி, மஞ்சூர், குந்தா கேம்ப், மட்டகண்டி வழியாக மதியம், 3:00 மணிக்கு காவடி ஊர்வலம் கோவில் வந்தடைந்தது.
காவடி எடுத்து வந்த பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது. இதையடுத்து மகாயாகம், 108 திரவிய யாகம், கோ பூஜை, உலக நல பிரார்த்தனை நடந்தது. மேலும், பல்வேறு பகுதிகளை சேர்ந்த சாது சன்னியாசிகள் ஆன்மிகம் குறித்து பேசினர்.
அன்னதானம் மற்றும் படுகர், மலைவாழ் பழங்குடிகளின் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையிலான குழுவினர் செய்து இருந்தனர்.