/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி மாணவியை அடித்து சித்ரவதை செய்த சித்தி கைது
/
பள்ளி மாணவியை அடித்து சித்ரவதை செய்த சித்தி கைது
ADDED : ஜூலை 29, 2025 07:59 PM

ஊட்டி; ஊட்டியில் பள்ளி மாணவியை அடித்து கொடுமைப்படுத்திய சித்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஊட்டியை அடுத்த உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மநாடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 45, அப்பகுதியில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி இறந்து விட்டார். இவர்களுக்கு, 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 13 வயது மூத்த மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ், விஜயா,42, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கடந்த வாரம் பள்ளி மாணவி பள்ளியில் சோகமாக இருந்துள்ளார். பாடத்திலும் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறி உள்ளார். அவருடைய தோழிகளிடமும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளார்.
மாணவியின் நடவடிக்கைகள் வழக்கத்திற்கு மாறாக இருந்ததால், இதுகுறித்து வகுப்பு ஆசிரியர்கள் கேள்வி கேட்டபோது, முதலில் ஒன்றும் இல்லை என்று கூறி, அமைதியாக இருந்துள்ளார்.
தொடர்ந்து, தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தியதில், பள்ளி மாணவி சரியாக படிக்கவில்லை என்று கூறி அவருடைய சித்தி விஜயா அடித்து கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. மேலும் நீண்ட நாட்களாக அவர் இதுபோல் அடித்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் உடலில் பல இடங்களில் அடித்ததில் வீக்கம் காணப்பட்டது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் சிறுமியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சிறுமியின் பெரியப்பா புதுமந்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்து விஜயாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமி தற்போது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.