/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கரடியை விரட்ட தானியங்கி ஒலி எழுப்பும் கருவி
/
கரடியை விரட்ட தானியங்கி ஒலி எழுப்பும் கருவி
ADDED : ஜன 02, 2025 12:44 AM

குன்னுார்,; -குன்னுாரில் அரசு பள்ளிக்கு இரவில் தொடர் 'விசிட்' செய்யும் கரடியை விரட்ட, ஒலி எழுப்பும் தானியங்கி கருவி பொருத்தப்பட்டது.
குன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில், சமீப காலமாக, வன விலங்குகள் உணவு தேடி, குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வருகின்றன. அதில்,டென்ட்ஹில் பகுதிக்கு அடிக்கடி இரவில் வரும் கரடி, அரசு மேல் நிலைப்பள்ளி, துவக்கப் பள்ளி சத்துணவு மையங்களின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து எண்ணெய் உட்கொண்டு, உணவு பொருட்களை சேதப்படுத்தி செல்கிறது. வனத்துறையினர் ஒலி எழுப்பும் தானியங்கி கருவி பொருத்த நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில், வனத்துறை ஊழியர்கள் ஒலி எழுப்பும் தானியங்கி கருவியை பள்ளி வளாகத்தில் பொருத்தினர்.
மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், ''சோலார் மூலம் இயங்கும், ஒலி எழுப்பும் தானியங்கி கருவி, இரவு நேரத்தில் இயங்கும் வகையில் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக கரடி கடந்து சென்றால், சென்சார் மூலம் தானியங்கி கருவியில், ஒலி தொடர்ந்து எழுப்பப்படுவதால், கரடி அங்கிருந்து வெளியேறிவிடும். கேமரா பொருத்தி, 'மொபைல் ஆப்'பில் கண்காணிக்கப்படும். கிராமங்களில் நுழையும் வனவிலங்குகளை விரட்ட இந்த கருவி பொருத்தி கண்காணிக்கப்படும்,'' என்றார்.