ADDED : மார் 04, 2024 11:57 PM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் ஊட்டி, கோத்தகிரி சாலையில் உலா வரும் பாகுபலி யானைக்கு அதன் தும்பிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம், சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, குரும்பனுார், ஓடந்துறை, பாலப்பட்டி, ஊமப்பாளையம், சமயபுரம், காந்தையூர், லிங்காபுரம், உழியூர், மொக்கை மேடு என பல்வேறு பகுதிகளில் பாகுபலி என்ற காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது.
ஊர் மக்களை தொந்தரவு செய்யாமலும், பயிர்களுக்கு சேதம் விளைவிக்காமலும் பாகுபலி யானை ஊருக்குள் உலா வருவது வழக்கமான நிகழ்வாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் மேட்டுப்பாளையம், சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் உலா வந்த பாகுபலி யானை அதன் பின் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
தற்போது மீண்டும் பாகுபலி யானையின் நடமாட்டம் தென்படுகிறது. மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் இரவு நேரத்தில், அண்மையில் பாகுபலி யானை உலா வந்தது.
அதே போல் காலை நேரங்களில் ஊட்டி சாலையில் உலா வருகிறது. தற்போது பாகுபலி யானைக்கு தும்பிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''பாகுபலி யானையை ஆய்வு செய்ததில், அதன் தும்பிக்கையில் உள்ளது சிராய்ப்பு காயம் மட்டுமே. வனத்துறை மருத்துவர்களிடமும், அதனை உறுதி செய்துள்ளோம். தொடர் கண்காணிப்பில் பாகுபலி யானை உள்ளது,'' என்றார்.---------

