/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் பறக்கும் 'நீலப்புலி' வண்ணத்து பூச்சிகள்
/
பந்தலுாரில் பறக்கும் 'நீலப்புலி' வண்ணத்து பூச்சிகள்
பந்தலுாரில் பறக்கும் 'நீலப்புலி' வண்ணத்து பூச்சிகள்
பந்தலுாரில் பறக்கும் 'நீலப்புலி' வண்ணத்து பூச்சிகள்
ADDED : நவ 20, 2025 05:33 AM

பந்தலுார்: பந்தலுார் சுற்றுப்புற பகுதியில், 'நீலப்புலி' வண்ணத்து பூச்சிகள் அதிகளவில் காணப்படுவதால், இதனை போட்டோ எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
'நீலப்புலி' இயற்கையை பாதுகாப்பதில் பெரும் பங்காற்றும் வண்ணத்து பூச்சிகளில், தமிழகத்தில், 327 வகைகள் உள்ளன. அதில், 'புளுடைகர்' எனப்படும், 'நீலப்புலி' எனப்படும் வண்ணத்து பூச்சிகள் தற்போது, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் பந்தலுார் பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன.
இவைகள் குளிர்ந்த காலநிலையை தேடி தற்போது மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு வர துவங்கி உள்ளன. வனங்களை ஒட்டிய வயல்வெளிகளில், யானை மற்றும் காட்டெருமை சாணங்களில் அதிக அளவில் காணப்படுவதுடன், பூச்செடிகளிலும் கொத்து கொத்தாக இவை காணப்படுகிறது.
இந்த வண்ணத்து பூச்சிகள் பல கி.மீ., வரை இடம்பெயரும் தன்மை கொண்டதுடன், கூட்டமாக செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளன. இவைகளை போட்டோ எடுப்பதில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இயற்கை ஆர்வலர் சிவசுப்ரமணியம் கூறுகையில், ''கடந்த காலங்களில் பந்தலுார் சுற்றுவட்டார பகுதி வயல்களில், நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட காலங்களில் பல வகையிலான வண்ணத்து பூச்சிகளை காணமுடியும்.
''ஆனால், மாறிவரும் விவசாயத்தாலும், அதிகளவில் நச்சு மருந்துகள் பயன்படுத்துவதாலும், வண்ணத்து பூச்சிகளின் வருகை குறைந்து வருகிறது.
''முதுமலை மற்றும் கூடலுார் வனப்பகுதியை ஒட்டிய, வயல்வெளிகளில் தற்போது இவை அதிகளவில் காணப்படுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது,'' என்றார்.

