ADDED : மே 23, 2026 01:52 AM
பாலக்காடு: மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத்துாண்டும் நோக்கில், பாலக்காடு ஐ.ஐ.டி.,யில், பிளஸ்-1 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான 'சயின்ஸ் க்வெஸ்ட் கண்டினியூயிங் த ஜேர்னி வித் வல்சா' என்ற முகாம் நடந்து வருகிறது.
கேரள மாநிலம்,பாலக்காடு ஐ.ஐ.டி., யின் இயற்பியல் துறை பேராசிரியராகவும், மாணவர் நலத்தலைவராகவும் பணியாற்றிய, மறைந்த பேராசிரியர் வல்சகுமாரின் நினைவாக இந்த முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், கேரள மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-1 அறிவியல் மாணவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
தொடக்க விழாவில், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையின் இணைப்பேராசிரியர் டாக்டர் அனுாப் ஜார்ஜ், 'சிந்திக்கும் இயந்திரங்களும், சிந்திக்கும் மனிதர்களும் ஏ.ஐ. மற்றும் தத்துவத்தை ஆராய்தல்' என்ற தலைப்பில் மாணவர்களிடையே பேசினார்.
10 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், அறிவியல், பொறியியல், கணிதம் சார்ந்த பல்வேறு கலந்துரையாடல்கள், சோதனைகள் மூலம் அறிவியல் கருத்துகளை எளிமையாக விளக்கும் அமர்வுகள் மற்றும் புதிர் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதுமட்டுமின்றி, மாணவர்களின் மன அழுத்தத்தை குறைத்து ஆளுமையை வளர்க்கும் விதமாக ஆலோசனைகள், யோகா, விளையாட்டு, சினிமா, கலாசார நிகழ்வுகள் மற்றும் வானியல் சார்ந்த சிறப்பு அமர்வுகளும் இந்த முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முகாம் வரும், 27ம் தேதியுடன் நிறைவடைகிறது.
