/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விலை வீழ்ச்சியால் ஆற்றோரம் கொட்டப்படும் கேரட்; உட்கொள்ளும் காட்டெருமைகளுக்கு பாதிப்பு
/
விலை வீழ்ச்சியால் ஆற்றோரம் கொட்டப்படும் கேரட்; உட்கொள்ளும் காட்டெருமைகளுக்கு பாதிப்பு
விலை வீழ்ச்சியால் ஆற்றோரம் கொட்டப்படும் கேரட்; உட்கொள்ளும் காட்டெருமைகளுக்கு பாதிப்பு
விலை வீழ்ச்சியால் ஆற்றோரம் கொட்டப்படும் கேரட்; உட்கொள்ளும் காட்டெருமைகளுக்கு பாதிப்பு
ADDED : மே 01, 2025 07:01 AM

குன்னுார் : ஊட்டி கேரட் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், கேத்தி பாலாடா ஆற்றோரத்தில் கொட்டப்படும் கேரட்டை காட்டெருமைகள் உட்கொள்வதால் உடல் உபாதை ஏற்படும் அபாயம் உள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி உட்பட சுற்றுப்புற பகுதிகளில் கேரட் விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், விளைச்சல் அதிகரிப்பு காரணமாக, கேரட் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
குறைந்தபட்சம் கிலோ, 12 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். அதில், முதல் தரம் மட்டுமே தற்போது சென்னை, மதுரை, புதுவை மற்றும் கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இரண்டு மற்றும் மூன்றாம் தர கேரட்களுக்கு, 7 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு விற்கப்படுவதால், ஆங்காங்கே கால்நடைகளுக்கு கொட்டி விடுகின்றனர். இந்நிலையில், குன்னுார் கேத்தி பாலாடா அருகே நேற்று தரம் குறைந்த கேரட் கொட்டப்பட்டன. இவற்றை தேடி காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் வந்து உட்கொண்டு செல்கின்றன.
கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், 'கேரட் போன்ற இனிப்பு சுவை உள்ள காய்கறிகளை அதிகளவில் உட் கொள்வதால் மாடு, குதிரை போன்ற கால்நடைகள், காட்டெருமை, மான் போன்ற விலங்குகளுக்கு வயிற்று போக்கு உபாதைகள் ஏற்படுவதுடன் உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது.
எனவே, விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, விவசாயிகள் கொட்டப்படும் கேரட்டை தோட்டக்கலை துறையினர் நேரடியாக பெற்று, மட்கும் கழிவு மேலாண்மை மையங்களில் உரம் தயாரிக்க எடுத்து செல்ல வேண்டும்,' என்றனர்.