/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒப்பந்த பணியாளர்கள் 'ஸ்டிரைக்': குப்பை தேக்கம்
/
ஒப்பந்த பணியாளர்கள் 'ஸ்டிரைக்': குப்பை தேக்கம்
ADDED : பிப் 25, 2026 05:53 AM

குன்னுார்: குன்னுார் நகராட்சியில், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளிலும் தனியார் ஒப்பந்த அடிப்படையில், துாய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தங்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றக் கோரி நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.அதில், 'கையுறை, காலணி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்; மாதந்தோறும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும்; பழுதான குப்பை வாகனங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும்; பிடித்தம் செய்யப்படும் பி.எப்., தொகையை சரியாக செலுத்த வேண்டும்; மாதந்தோறும் 'பே ஸ்லிப்' வழங்க வேண்டும்;காப்பீட்டு திட்டம், ஊதிய உயர்வு மற்றும் கருணை தொகை வழங்க வேண்டும்; வார மற்றும் பண்டிகை நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்; தங்களை நகராட்சியின் நேரடி கண்காணிப்பில் பணியமர்த்த வேண்டும்,' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். தீர்வு கிடைக்காத நிலையில், போராட்டம் நீடித்தது.
வேலைக்கு திரும்பாத நிலையில், அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
நகராட்சியில், துணை தலைவரின் வார்டான, 12வது வார்டு உமரி காட்டேஜ் -ஆப்பிள் பி சாலையில் ஆங்கங்கே வைத்த குப்பைகளை நாய்கள் இழுத்து சென்றதால், சாலையில், சிதறிய குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மாலையில், சிலர் அவற்றை அகற்றினர்.

