
இரும்பு பொருட்கள் திருடியவர்கள் கைது
தடாகம் வட்டாரத்தில் அரசிடம் உரிய அனுமதி பெறாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயங்கி வந்த செங்கல் சூளைகள், தொடர்ந்து இயங்க, மாவட்ட நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியன தடை உத்தரவு பிறப்பித்தது.
தடாகம் வட்டார செங்கல் சூளைகளுக்கும் 'சீல்' வைக்கப்பட்டன. ஆட்கள் நடமாட்டம் இல்லாத இச்சூளைகளில் உள்ள இரும்பு பொருட்கள் அடிக்கடி திருட்டு போயின.
தடாகம் தேவராஜ், சோமையனூர் செந்தில் ஆகியோருக்கு சொந்தமான செங்கல் சேம்பரில் இருந்து கடந்த இரண்டு மாதங்களாக பழைய இரும்பு பொருட்கள் திருடு போயின.
இது குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி.,நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன், தடாகம் எஸ்.ஐ., ஜெய்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தடாகம் வட்டாரத்தில் உள்ள, 12 'சிசிடிவி' கேமராக்களை போலீசார் கண்காணித்த போது, சின்ன தடாகம் குட்டைவழியை சேர்ந்த செல்வராஜ், 40, ஜீவானந்தம் என்ற மனோஜ்,24 ஆகிய இருவரும், 500 கிலோ எடையுள்ள இரும்பு பொருட்களை திருடி, அந்த பொருள்களை எடுத்துச் செல்ல டாக்ஸியை வாடகைக்கு எடுத்து, பயன்படுத்தியது தெரியவந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இரும்பு பொருட்களையும் கைப்பற்றினர். திருட்டுக்கு பயன்படுத்திய நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பவானி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
மதுரையை சேர்ந்தவர் கோபி, 34. இவர் கோவை மாவட்டம் கணபதியில் கட்டட வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடன் பணிபுரிந்த லோகநாதன், முருகன் ஆகியோருடன் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, மூவரும் பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். லோகநாதன், முருகன் குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்த போது கோபியை காணவில்லை.
அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதையடுத்து அவர்கள், கோபியின் வீட்டிற்கு சென்றனர். அங்கும் அவர் வராததால், மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வந்து புகார் அளித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது கோபி நீரில் மூழ்கி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கோபியின் உடலை கைப்பற்றி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

