
வீடு புகுந்து 18 சவரன் நகை திருட்டு -
கருமத்தம்பட்டியில் வீடு புகுந்து, 18 சவரன் நகை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கருமத்தம்பட்டி அடுத்த சாரதாம்பாள் நகரை சேர்ந்த சிவானந்த பாண்டியன், 39. அன்னூர் ரோட்டில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார்.கடந்த வாரத்தில் இவரது தந்தை ராஜலிங்கம்,இறந்ததால், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சிவானந்த பாண்டியன் சாத்தான் குளம் சென்றுவிட்டார்.
இறுதி காரியங்களை முடித்துவிட்டு, கருமத்தம்பட்டி வந்தார். வீட்டக்கு சென்றபோது, முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த, 18 சவரன் நகை திருடப்பட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து, கருமத்தம்பட்டி போலீசில் அவர் புகார் தெரிவித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், வீடு புகுந்து நகை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
பறக்கும் படை வாகன சோதனையில், பஸ்சில் கஞ்சாவுடன் வந்த வாலிபர் சிக்கினார்.
சூலூர் அடுத்த சிந்தாமணி புதூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அதில், கேரளா நோக்கி சென்ற ஆம்னி பஸ்சில் சோதனையிட்டனர். அதில், ஒரு வாலிபரின் பையை சோதனையிட்ட போது, அதில், கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சானு,25, என்பது தெரிந்தது. இதையடுத்து, கஞ்சாவுடன் சானு, சூலூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சானுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

