/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீசி எறியும் 'பிளாஸ்டிக்' கழிவுகளால் பாதிப்பு
/
வீசி எறியும் 'பிளாஸ்டிக்' கழிவுகளால் பாதிப்பு
ADDED : மார் 07, 2024 11:45 AM

ஊட்டி;ஊட்டி நகரின் பல்வேறு பகுதியில் வீசி எறியும் பிளாஸ்டிக் கழிவுகளால் வன விலங்குகள், கால்நடைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஊட்டி பிங்கர் போஸ்ட் அருகே உள்ள நகராட்சிக்கு உட்பட்ட, 2வது வார்டு பகுதி பாரதியார் நகரில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் இங்கு வசிக்கும் முதியோர், பள்ளி மற்றும் கல்லுாரி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வர முடியாமலும், கர்ப்பிணி பெண்கள் அவசர தேவைகளுக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதியில் மழை காலங்களில் சாலை சகதியாக மாறுவதால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சாலையின் வழியாக வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இங்குள்ள வனப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள், குவிந்து காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்காக சுற்றித் திரியும் கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், 'மழை காலம் துவங்குவதற்கு முன் பாரதியார் நகர் பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும். வனப்பகுதிகளில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

