மலை மாவட்டத்தில் மேரக்காய் செடிகளை நோய் தாக்கும் அபாயம்!வறட்சி மேலாண்மையை பின்பற்ற வேண்டியது அவசியம்
மலை மாவட்டத்தில் மேரக்காய் செடிகளை நோய் தாக்கும் அபாயம்!வறட்சி மேலாண்மையை பின்பற்ற வேண்டியது அவசியம்
UPDATED : ஆக 04, 2026 05:40 PM
ADDED : ஆக 04, 2026 05:25 PM

ஊட்டி: 'மேரக்காய் சாகுபடியை வறட்சி; நோய் பரவலில் இருந்து பாதுகாக்க வறட்சி மேலாண்மை முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அதில்,ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய மேரக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால், தோட்டக்கலைத் துறையினரும் ஊக்குவித்து வருகின்றனர்.
மேரக்காய் சாகுபடி மூன்று முதல் நான்கு மாதங்களில் அறுவடை தொடங்கி, வாரம் இரு முறை வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம். இதற்கென தனியாக விதைகள் வாங்க தேவையில்லை. முதிர்ந்த காய்களையே முளைக்க வைத்து விதையாக பயன்படுத்தலாம். ஒரு எக்டருக்கு சராசரியாக, 25 முதல் 35 டன் வரை விளைச்சல் கிடைக்கும்.
பனி மற்றும் குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் மேரக்காய் சாகுபடிக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுவதால், நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக கோத்தகிரி, குன்னுார், குந்தா, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
வறட்சி மேலாண்மை முறை தற்போது நிலவி வரும்,' எல்நினோ' தாக்கத்தால் மழையின்மை, அதிக வெப்பநிலை காரணமாக, மேரக்காய் பயிரில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு செடியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, நோய் ஏற்பட வாய்ப்பிருப்பதால் வறட்சி மேலாண்மை முறைகளை பின்பற்ற விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுயைில், 'தென்னை நார் கழிவு, வைக்கோல், உலர்ந்த இலைகள் போன்றவற்றை செடியின் துாரின் பகுதியில் சுற்றி மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாப்பதுடன், மண்ணின் நீராவியாவதை தடுக்க வேண்டும்.
களைகளை முற்றிலுமாக அகற்றி, பயிருடன் நீர் மற்றும் ஊட்டச்சத்தை குறைக்க வேண்டும். கடுமையான வறட்சி ஏற்படும் போது, ஒரு சதவீதம் 'பொட்டாசியம் நைட்ரேட்' நீரில் கரையும் உரத்தினை இலை வழி தெளிப்பதன் வாயிலாக பயிரின் அழுத்தத்தை குறைத்து செடியின் வளர்ச்சியை பாதுகாக்கலாம். அதிக வெப்பநிலை மற்றும் நண்பகல் நேரங்களில் நீர்பாசனத்தை தவிர்த்து காலை அல்லது மாலை நேரங்களில் நீர் பாய்ச்ச வேண்டும். இதனை தற்போதைய காலகட்டத்தில் தவறாமல் பின்பற்றி நல்ல மகசூல் பெற வேண்டும்,' என்றனர்.
