ஆற்று படுகையில் அதிகரிக்கும் கட்டட கழிவுகளால் பேரிடர் அபாயம்! அத்து மீறல்களை கண்டுகொள்ளாத அரசு துறையினர்
ஆற்று படுகையில் அதிகரிக்கும் கட்டட கழிவுகளால் பேரிடர் அபாயம்! அத்து மீறல்களை கண்டுகொள்ளாத அரசு துறையினர்
UPDATED : ஆக 27, 2026 06:22 PM
ADDED : ஆக 27, 2026 06:22 PM

மஞ்சூர்: மஞ்சூர் அருகே கெத்தை மாயபஜார் பாலத்தில் கொட்டப்பட்ட கழிவுகளால் மழைநீர் செல்லும் வழித்தடத்தில் தடை ஏற்பட்டு, பேரிடர் அபாயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம், இயற்கை சூழலை பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில், நீரோடைகள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதால், ஒட்டுமொத்த சூழலியலும், பாதிக்கப்பட்டு வருகின்றன.
சமீபகாலமாக குன்னுாரில் ஐகோர்ட் உத்தரவுகளை மீறி, சதுப்பு நிலங்களில் கட்டட கழிவுகள் கொட்டப்படுவதால் நீர் நிலைகள அழிந்து வருகின்றன. பருவமழை காலங்களில் மலையிலிருந்து வரும் அதிகப்படியான நீர் செல்ல வழியில்லாமல் பல்வேறு மழை நீர் வடிகால்கள் அடைப்பட்டு கிடக்கின்றன.
நீரோடையில் கட்டட கழிவுகள் இந்நிலையில், மஞ்சூர் கோவை சாலையில் கெத்தை அருகே மாயபஜார் பகுதியில் பாலத்தின் வழியில் பிரதான ஆற்றுபடுகை உள்ளது. கோரகுந்தா, தாய் சோலையில் உற்பத்தியாகும் நீர், இதன் வழியாக கெத்தை மாய பஜார் பாலத்தின் வழியாக கெத்தை அணைத்து செல்கிறது. அங்கிருந்து ராட்சதக் குழாய் வழியாக பரளி மற்றும் பில்லுார் மின் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. தவிர கூட்டு குடிநீர் திட்டத்திற்கும் இந்த தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
யானைகளுக்கும் பாதிப்பு மேலும் இந்த ஆற்றில் செல்லும் தண்ணீர், தமிழக-கேரளா எல்லையை பகுதிகளில், யானைகளுக்கு பெரும் பயனாக உள்ளது. இங்கு இதமான சீதோஷ்ண நிலை இங்கு நிலவுவதால், கேரளா வனப்பகுதியில் இருந்து அதிக அளவிலான யானைகள் இங்கு வந்து செல்கின்றன. இந்நிலையில், மாய பஜார் பாலத்தின் அடியில் சிலர் கட்டட கழிவுகளை கொட்டியதால், ஆற்றுபடுகை மறிக்கப்படுவதுடன், யானை வழித்தடத்திலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் பெள்ளியப்பன் கூறுகையில், ''மலை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சதுப்பு நிலங்கள், நீரோடைகள் விதிமீறி ஆக்கிரமிக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால் இங்கு இயற்கை சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. கெத்தை மாயபஜார் பாலத்தில் கட்டடக் கழிவுகள் கொட்டப்படுவதால், கெத்தை, பரளி, பில்லுார் மின் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் உள்ளது. இந்த தண்ணீர் பில்லுார் அணையில் சேகரமாகி, உபரி நீர் வெளியேறும் சமயங்களில் வெளி மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கரில் சாகுபடி நிலங்களும் பயனடைந்து வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆற்று பகுதியை சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
