/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இறந்து கிடந்த குரங்குகள்: வனத்துறை தீவிர விசாரணை
/
இறந்து கிடந்த குரங்குகள்: வனத்துறை தீவிர விசாரணை
ADDED : நவ 19, 2024 11:35 PM
கோத்தகிரி; கோத்தகிரியில் மர்மமான முறையில் குரங்குகள் இறந்து கிடந்தது தொடர்பாக, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி நகரப்பகுதியில், குரங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, குடியிருப்பு பகுதியில் கூட்டமாக உலா வரும் குரங்குகள், உடமைகளையும், உணவு பொருட்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கோத்தகிரி காமராஜர் சதுக்கம்-- அரவேனு மாற்று பாதையில், நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க அலுவலகம் மற்றும் டான் போஸ்கோ பகுதியில், நேற்று முன்தினம் ஆறு குரங்குகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து கிடந்தன. குரங்குகள் விஷம் வைத்து கொல்லப் பட்டதா அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆய்வு செய்து, கால்நடை மருத்துவதற்கு தகவல் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், குரங்குகள் அதே இடத்தில் புதைக்கப்பட்டன. வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த குரங்குகளை பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உடல் உறுப்புகளின் மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை வந்த பின்பு, இறப்புக்கான முழு காரணம் தெரிய வரும். இருப்பினும், அப்பகுதியில் விசாரித்து வருகிறோம். விஷம் வைக்கப்பட்டு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.