/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
என்.ஜி.ஜி.ஓ., காலனியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதால் மாற்றுப்பாதை! உடனடியாக மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை
/
என்.ஜி.ஜி.ஓ., காலனியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதால் மாற்றுப்பாதை! உடனடியாக மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை
என்.ஜி.ஜி.ஓ., காலனியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதால் மாற்றுப்பாதை! உடனடியாக மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை
என்.ஜி.ஜி.ஓ., காலனியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதால் மாற்றுப்பாதை! உடனடியாக மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஜன 31, 2024 11:41 PM

பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனியில் இருந்து இடிகரை செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி விரைவில் துவங்க உள்ளது. வாகன போக்குவரத்துக்கு மாற்று பாதையை அறிவித்த பின்னர், மேம்பால கட்டுமான பணியை துவக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால், நகர போக்குவரத்து போல, புறநகர் பகுதிகளிலும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.
ஆனால், தரமான சாலை மற்றும் மேம்பால வசதிகள் இல்லாததால், போக்குவரத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
10 முறை கேட் மூடப்படுகிறது
கோவை வடக்கு, புறநகர் பகுதியான அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஜி.ஓ., காலனி பகுதியில் இருந்து, இடிகரை செல்லும் வழியில் ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது.
இதை கடந்துதான், இடிகரை, செங்காளி பாளையம், வட்டமலை பாளையம், அத்திப்பாளையம், வையம்பாளையம், கோயில் பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏராளமான குடியிருப்புகள், கிராமங்களுக்கு செல்ல வேண்டும். மேலும், கோவில் பாளையம் சத்தி ரோடு உடன் இணைந்து அன்னூர், அவிநாசி, கோபி, சத்தியமங்கலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும் என்பதால், கோவை நகருக்குள் செல்ல விரும்பாத லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், இப்பாதையை இரவு நேரங்களில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. பகல் நேரங்களில், குறிப்பாக, பள்ளி, கல்லூரி வாகனங்கள், கோவை நகருக்கு பணி நிமித்தமாக செல்பவர்கள் ரயில்வே கிராசிங்கை கடந்து சென்று வருகின்றனர்.
இந்த ரயில்வே பாதையை நாள் ஒன்றுக்கு, 10 முறை கோவை-மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் பாசஞ்சர் ரயில் கடந்து செல்கிறது. இதனால் அவ்வப்போது, ரயில்வே கேட் மூடப்பட்டு, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்தை விரைவில் துவக்கி, இப்பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போது, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், என்.ஜி.ஜி.ஓ., காலனி ரயில்வே லெவல் கிராசிங்கில் மேம்பாலம் கட்டும் பணி இம்மாதம்,10ம் தேதிக்குள் துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கலந்தாய்வு கூட்டம்
இது தொடர்பாக, பொதுமக்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் ரயில்வே லெவல் கிராசிங் அருகே நடந்தது.
இதில், அசோகபுரம் ஊராட்சி தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம், துடியலூர் போலீசார், போக்குவரத்து துறை, ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், பொதுமக்கள் பேசுகையில்,' பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதை நாங்கள் வரவேற்கிறோம். இடிகரை, அத்திப்பாளையம், வையம்பாளையம், கோவிந்த நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மேட்டுப்பாளையம் ரோடு வர பிரதான பாதையாக என்.ஜி.ஜி.ஓ., காலனி ரயில்வே லெவல் கிராசிங் பாதை உள்ளது.
ரயில்வே மேம்பாலம் கட்ட இப்பாதையை அடைத்தால், மாற்றுப்பாதை எது என்பதை போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினர் அடையாளம் காட்ட வேண்டும். அப்பாதையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், பஸ் போக்குவரத்து உள்ளிட்டவை, 24 மணி நேரமும் பாதுகாப்பாக, தாராளமாக போய்வர, தரமான சாலையை அமைத்து தர வேண்டும்.
மாற்றுப் பாதையை அமைத்து தராமல், உடனடியாக ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியை துவக்கினால், பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும்.
இதை அனைத்து துறை அதிகாரிகளும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்' என்றனர்.