/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழிலாளர்களுக்கு சீருடை வழங்குவதில் பாரபட்சம்
/
தொழிலாளர்களுக்கு சீருடை வழங்குவதில் பாரபட்சம்
ADDED : பிப் 20, 2026 04:59 AM
பந்தலுார்: பந்தலுார் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில், நிரந்தர தொழிலாளர்களுக்கு சீருடை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
பந்தலுார் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில், 1,533 பேர் உறுப்பினர்களாக இருந்த நிலையில் தற்போது, 1,200 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், நாளொன்றுக்கு, 20 ஆயிரம் கிலோ, பசுந்தயிலை கொள்முதல் செய்த தொழிற்சாலையில், தற்போது ஒரு மாதத்திற்கு, 20 ஆயிரம் கிலோ கொள் முதல் செய்யப்படுகிறது. பசுந்தயிலை வழங்கும் உறுப்பினர்களுக்கு, முறையாக பணம் கொடுக்காத நிலையில் உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தொழிற்சாலையில், 1,600 ரூபாய் மதிப்பிலான சீருடைகள், அனைத்து நிரந்தர தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
ஆனால், 'இங்கு பசுந்தேயிலை கொள்முதல் குறைவாக உள்ள நிலையில், மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை வழங்கும் நிலையில், ஆண்டிற்கு, 168 நாட்கள் வேலை செய்தவர்களுக்கு இரண்டு செட் சீருடைகள்; 148 நாட்கள் வேலை செய்தவர்களுக்கு ஒரு செட் சீருடை; 100 நாட்கள் வேலை செய்தவர்களுக்கு சீருடை இல்லை,'என, நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிற கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், நிரந்தர தொழிலாளர்களுக்கு தரமான, 2- செட் சீருடை வழங்கப்பட்டுள்ள நிலையில் இங்கு பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பந்தலூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் மட்டும் தரம் குறைந்த சீருடை வழங்கப்பட்டு உள்ளதாக, ஏற்கனவே மாநில முதல்வருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது
தொழிற்சாலை கணக்காளர் சந்திரசேகர் கூறுகையில், ''ஆண்டிற்கு, 175 நாட்கள் வேலை செய்தவர்களுக்கு மட்டுமே சீருடை வழங்க முடியும். வேலை குறைவாக உள்ள தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கினால் தணிக்கையின் போது பிரச்னை ஏற்படும். எனவே இதுகுறித்து ஒன்றும் செய்ய இயலாது,'' என்றார்.
சி.ஐ.டி.யூ., தொழிற்சங்க நிர்வாகி ரமேஷ் கூறுகையில்,''நிரந்தர தொழிலாளர்கள் அனைவருக்கும் சீருடை வழங்க வேண்டும் என்பது தொழிலாளர் சட்டம். பந்தலுார் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில், சீருடை மறுப்பது, தட்டி கேட்கும் தொழிலாளர்களை மிரட்டுவது தொடர்பாக, தொழிலாளர் நலத்துறையில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

