/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குளங்களை தூர்வாருவது இப்போதைக்கு இல்லை; அரசின் தகவலால் விவசாயிகள் அதிர்ச்சி
/
குளங்களை தூர்வாருவது இப்போதைக்கு இல்லை; அரசின் தகவலால் விவசாயிகள் அதிர்ச்சி
குளங்களை தூர்வாருவது இப்போதைக்கு இல்லை; அரசின் தகவலால் விவசாயிகள் அதிர்ச்சி
குளங்களை தூர்வாருவது இப்போதைக்கு இல்லை; அரசின் தகவலால் விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : பிப் 07, 2024 11:17 PM
சூலுார் : சூலுாரில் உள்ள இரு குளங்களில், ஆண்டு முழுவதும் முழு கொள்ளளவு நீர் இருப்பதால், குளங்களை தூர்வாரும் திட்டம் தற்போது இல்லை, என, நீர் வளத்துறை தெரிவித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில், பெரிய குளம் மற்றும் சின்ன குளம் உள்ளன. பவானி சாகர் அணைக்கோட்ட நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்குளங்கள், முறையே, 100 மற்றும், 80 ஏக்கர் பரப்பளவு கொண்டவை ஆகும்.
இக்குளங்களின் நீரால், சுற்றுவட்டார மக்களும், விவசாயிகளும் பயன் பெற்று வருகின்றனர். நொய்யல் ஆற்றில் உள்ள ராவத்தூர் தடுப்பணையில் இருந்து, ராஜ வாய்க்கால் மூலம் இக்குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டு வருகிறது.
கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றில் ஓடும் கழிவு நீர் தான் குளங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. இதனால், குளங்களில் அதிகளவில் கழிவுகள் தேங்கி, நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது. கழிவுகளை அகற்றி குளங்களை தூர் வார வேண்டும், என, சுற்றுவட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பல்லடம் சின்னியகவுண்டன்பாளையத்தை சேர்ந்த பா.ஜ., நிர்வாகி வித்ய பிரகாஷ், முதல்வர் தனிப்பிரிவுக்கு, சூலுார் குளங்களை தூர் வார கோரி அனுப்பிய மனுவில், '2017 ல் தூர் வார கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், குளங்களில் தண்ணீர் இருப்பதால் தூர் வாரவில்லை என, நீர் வளத்துறை தெரிவித்துள்ளது.
எனவே, இக்குளங்களை நம்பியுள்ள இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இரு குளங்களையும் தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கோரியிருந்தார். அதன் பின், கடந்த மாதம், முதல்வரின் முகவரி' திட்டத்தின் மூலம் சில கேள்விகளை கேட்டு மேல்முறையீடு செய்திருந்தார்.
அதற்கு, நீர் வளத்துறை கோவை பாசன உப கோட்ட உதவி செயற்பொறியாளர் அளித்துள்ள பதிலில், சூலுார் பெரிய குளம் மற்றும் சின்ன குளத்தில் ஆண்டு முழுவதும் முழு கொள்ளளவு தண்ணீர் நிரம்பி உள்ளது.
அதனால், தற்போது, குளங்களை தூர் வாரும் திட்டம் எதுவும் இல்லை. மேலும், அரசிடம் இருந்து ஏதேனும் சிறப்பு நிதி கிடைக்க பெறும் பட்சத்தில், நீரினை அப்புறப்படுத்தி இரு குளங்களையும் தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, வித்ய பிரகாஷ் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களாக முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டர் அலுவலகம், நீர்வளத்துறை ஆகிய அலுவலகங்களுக்கு அளித்த மனுக்களுக்கு, குளங்களில் தண்ணீர் உள்ளது.
அதனால் தூர் வாரவில்லை, என பதில் கிடைத்துள்ளது. தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தி விட்டு, தூர் வார வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை ஆகும்.
அடுத்த பருவ மழை துவங்கும் முன், குளங்களை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

