/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வறட்சி நிலவுவதால் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் குறையும் இலை வரத்து!
/
வறட்சி நிலவுவதால் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் குறையும் இலை வரத்து!
வறட்சி நிலவுவதால் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் குறையும் இலை வரத்து!
வறட்சி நிலவுவதால் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் குறையும் இலை வரத்து!
ADDED : பிப் 03, 2025 11:20 PM

ஊட்டி; நீலகிரியில் வறட்சியான காலநிலை நிலவுவதால், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் இலை வரத்து படிப்படியாக குறைந்து, உற்பத்தி செலவினங்களை தாக்கு பிடிக்க முடியாமல் திணறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் இன்கோ சர்வ் (கூட்டுறவு இணையம்) கட்டுப்பாட்டின் கீழ், 'மஞ்சூர், கிண்ணக்கொரை, பிக்கட்டி, எடக்காடு, இத்தலார், நஞ்சநாடு, கைக்காட்டி, மகாலிங்கம், எப்பநாடு, கரும்பாலம், சாலிஸ்பரி,' உள்ளிட்ட, 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
தொழிற்சாலைகளில், 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். தங்களது தேயிலை தோட்டத்தில் அறுவடை செய்யும் இலையை அந்தந்த கூட்டுறவு தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர். அதே சமயத்தில், கூட்டுறவு தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களில், 40 சதவீதம் பேர், கூட்டுறவு தொழிற்சாலை, தனியார் தொழிற்சாலைக்கும் அறுவடை செய்யும் இலையை வினியோகித்து வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளில் தினசரி, 25 ஆயிரம் கிலோ முதல் 40 ஆயிரம் கிலோ வரை கொள்முதல் செய்யும் இலையை அரைக்கும் அதிநவீன மெஷின்கள் பொருத்தப்பட்டுள்ளது.
சமீப காலமாக பசுந்தேயிலைக்கான விலை வழங்குதில் தொடரும் பிரச்னையால், தொழிற்சாலை உறுப்பினர்கள் தனியார் தேயிலை தொழிற்சாலைகளை நாடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கூட்டுறவு தொழிற்சாலைகளில் எதிர்பார்த்த அளவு இலை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வறட்சியான காலநிலை
ஆண்டு தோறும் டிச., மாதத்தில் நிலவும் பனிப்பொழிவால் மார்ச் மாதம் இறுதி வரை பசுந்தேயிலை வரத்து படிப்படியாக குறைவது வழக்கம். கடந்த மூன்று மாதமாக பனிப்பொழிவு உள்ளதால், அறுவடைக்கு தயாரான இலைகளை அவசர, அவசரமாக உறுப்பினர்கள் கொள்முதல் செய்து தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர். எனினும், ஜன., இரண்டாவது வாரத்தில் இருந்து, ஒரு கூட்டுறவு தொழிற்சாலைக்கு தினசரி, 1,000 கிலோ முதல் அதிகபட்சம், 2,000 கிலோ வரை மட்டும் பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால், மூன்று 'ஷிப்ட்' தேயிலை துாள் உற்பத்தி மேற்கொண்டு வந்த தொழிற்சாலைகள், போதிய பசுந்தேயிலை இல்லாததால், ஒரு ஷிப்ட் அடிப்படையில் உற்பத்தி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. இது போன்ற நிலையால் உற்பத்தி செலவினங்களை தாக்குப்பிடிக்க முடியாமல் தொழிற்சாலை நிர்வாகங்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாகன வசதிக்கு ஏற்பாடு
பனிப்பொழிவால் இலை வரத்து அடியோடு குறையும் சமயங்களில், பசுந்தேயிலைக்கு ஓரளவு மட்டுமே விலை கிடைக்கிறது. இதை சாதகமாக்கும், தனியார் தொழிற்சாலை ஏஜென்ட்கள் கூட்டுறவு தொழிற்சாலை உறுப்பினர்களை நாடி சென்று இலைகளை கொள்முதல் செய்கின்றனர்.
இதை தடுக்கும் விதமாக தற்போது, அந்தந்த கூட்டுறவு தொழிற்சாலை நிர்வாகங்கள் உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளன. அதில், 'நமது கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் உறுப்பினர்களுக்காக, அனைத்து பசுந்தேயிலை மையங்களிலும், பசுந்தேயிலை கொள்முதல் செய்வதற்கு இலை சேகரிப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதனை உறுப்பினர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

