/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாகனங்களை வழிமறிக்கும் யானை: ஓட்டுனர்கள் அச்சம்
/
வாகனங்களை வழிமறிக்கும் யானை: ஓட்டுனர்கள் அச்சம்
ADDED : ஜன 26, 2025 11:03 PM

பந்தலுார், ; நீலகிரியில் இருந்து, கர்நாடகா மாநிலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் யானைகளால், ஓட்டுனர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை தொடர்கிறது.
நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் இருந்து, கர்நாடக மாநிலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.
வனப்பகுதிகளுக்கு மத்தியில் சாலை செல்வதால், பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளை ஒட்டி யானை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருகின்றன. இரவு நேரங்களில் வனவிலங்குகள் எளிதாக சாலைகளை கடந்து செல்லும் விதமாக, தனியார் வாகன போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதுமலை-பந்திப்பூர் சாலையில் மங்களகாலபானி என்ற இடத்தில், அடிக்கடி ஒரு கொம்பன் யானை சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து உணவு பொருட்களை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அதில், கனரக லாரிகள் செல்லும்போது அவற்றை நிறுத்தி, தார்பாலினுள் தும்பிக்கையை விட்டு உணவு பொருட்களை எடுத்து ருசிக்கிறது.
எதிரே வரும் வாகனங்கள் மற்றும் லாரிகள் பின்னால் செல்லும் வாகனங்கள், ஹாரன் அடிக்கும்போது கோபத்துடன் வாகனங்களை தாக்கும் விதமாக துரத்துவதும் தொடர்கிறது. அதில், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, யானையிடமிருந்து உயிர்தப்பி ஓடி வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இந்த கொம்பன் யானை முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து, கர்நாடக வனப்பகுதிக்குள் வந்துள்ளது. யானையை வனத்துறையினர் விரட்ட முயன்றாலும், வனத்துறை வாகனத்தையும் தாக்க வருவதால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனினும் உயர் அதிகாரிகளின் அனுமதிக்கு பின்னர் இந்த யானையை அடர்த்தியான வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
டிரைவர்கள் கூறுகையில்,' இந்த யானை அடிக்கடி சாலையில் வந்து லாரிகளை நிறுத்துவதால், உயிர் பயத்துடன் பயணம் மேற்கொள்கிறோம். அசம்பாவிதம் நடக்கும் முன், இந்த யானையை அடர்ந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,' என்றனர்.