/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனத்துறை வாகனத்தை துரத்திய யானையால் பரபரப்பு
/
வனத்துறை வாகனத்தை துரத்திய யானையால் பரபரப்பு
ADDED : பிப் 07, 2026 06:27 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே அத்திமாநகர் குடியிருப்பு பகுதியில், ஒற்றை ஆண் யானை நாள்தோறும் இரவில் முகாமிடுவது வாடிக்கையாக மாறி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் பகல் நேரத்தில், சாலையில் நடந்து வந்த யானையிடம் சிக்காமல் பைக்கில் சென்ற தம்பதியினர் உயிர் தப்பினர்.
இரவு, 8:00 மணிக்கு மேல் கிராமத்திற்கு வரும் யானை, சாலை மற்றும் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள நடைபாதைகளில் உலா வருவதை வழக்கமாக கொண்டு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு யானை வந்த நிலையில், கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வாகனத்தில் வந்து, ஒலியெழுப்பி யானையை விரட்ட முயன்றனர். ஆனால், யானை வனத்துறை வாகனத்தை துரத்தியதால், வனத்துறையினர் வேறு வழியின்றி பின்னோக்கி வாகனத்தை இயக்கி தப்பினர். விடியற்காலை வரை அப்பகுதியில் முகமிட்ட யானை காலையில் புதர் பகுதிக்குள் சென்று மறைந்தது.
வனத்துறையினர் கூறுகையில், 'கூடலுார் மற்றும் ஊட்டி, கேரளா மாநில மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்து செல்லும் வாகனங்கள் இப்பகுதியில் கவனத்துடன் செல்ல வேண்டும்,' என்றனர்.

