/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வயநாடு சாலையில் வாகனங்களை பந்தாடிய யானை
/
வயநாடு சாலையில் வாகனங்களை பந்தாடிய யானை
ADDED : ஏப் 09, 2025 10:07 PM

பந்தலுார்; கேரளா மாநிலம் வயநாடு சாலையில் நிறுத்தி இருந்த வாகனங்களை, பந்தாடி சென்ற காட்டு யானையால் வாகன ஓட்டுனர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பந்தலுார் எல்லையில், கேரளா மாநிலம் வயநாடு பனவள்ளி என்ற இடத்திலிருந்து, கர்நாடக மாநிலம் செல்லும் காட்டிகுளம் சாலை ஓரத்தில், நேற்று மதியம் ஒற்றை ஆண் யானை முகாமிட்டது.
இந்த யானையை இங்குள்ள மக்கள் கண்காணித்து வந்தபோது, திடீரென சாலையில் இறங்கி அங்கு நின்றிருந்த பொதுமக்களை துரத்தியது. மேலும், கோபத்துடன் சாலையில் வந்த யானை, சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த வாகனங்களை பந்தாடியது.
அதில், சில இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் யானை சாலை ஓரத்தில் இருந்த காபி தோட்டத்துக்குள் சென்றது. வனத்துறையினர் கூறுகையில்,'யானை கோபத்துடன் உலா வருவதால், பொதுமக்கள் நடந்த செல்வதை தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும். வனத்துறை சிறப்பு குழுவினர் கண்காணிப்பு தொடர்கிறது,' என்றனர்.