ADDED : ஜன 08, 2026 05:12 AM
கூடலுார்: கூடலுார் ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில், மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமுக்கு, தலைமை ஆசிரியர் (பொ) கவிதா தலைமை வகித்தார். கூடலுார் மின் கோட்ட செயற் பொறியாளர் முத்துக்குமார் பேசுகையில், ''மின் உற்பத்தி மேற்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், தேவைக்கு நிகராண மின் உற்பத்தி செய்ய மூலப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது.
மின் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ள அரசு மானியம் வழங்கி வருகிறது. மின்வாரியத்துடன் இணைந்து வீடுகளுக்கு சோலார் பேனல் அமைத்து மின்சார தேவை பூர்த்தி செய்து கொள்ளலாம்,''என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணி பேசுகையில், ''மின்சார சேமிப்பின் மூலம் உற்பத்தி செலவினம் குறையும். தரமான மின்சாதன பொருள்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். தேவையற்ற நேரங்களில் மின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
முகாமில், உதவி மின் பொறியாளர்கள் தமிழரசன், ஹரிபிரசாத், 'ஆல் தி சில்ட்ரன்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

