/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்காததால் விவசாயிகள் அதிர்ச்சி! ரூ.50 கோடி நிலுவை உள்ளதால் 'நோட்டீஸ்'
/
பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்காததால் விவசாயிகள் அதிர்ச்சி! ரூ.50 கோடி நிலுவை உள்ளதால் 'நோட்டீஸ்'
பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்காததால் விவசாயிகள் அதிர்ச்சி! ரூ.50 கோடி நிலுவை உள்ளதால் 'நோட்டீஸ்'
பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்காததால் விவசாயிகள் அதிர்ச்சி! ரூ.50 கோடி நிலுவை உள்ளதால் 'நோட்டீஸ்'
ADDED : ஜன 08, 2025 10:36 PM

குன்னுார்: குன்னுார் தேயிலை வாரியம் அறிவித்த, பசுந்தேயிலை நிர்ணய விலையை இதுவரை வழங்காமல் உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலை நம்பி பல்லாயிரக் கணக்கான விவசாயிகள், லட்சக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு, 235 தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள், குன்னுார் ஏல மையம் மற்றும் 'டீசர்வ்' மையங்களில் ஏலம் விடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
ஒரு கிலோ துாளுக்கு 4 கிலோ பசுந்தேயிலை
ஒரு கிலோ தேயிலை துாள் உற்பத்தி செய்ய, 4 கிலோ பசுந்தேயிலையை, விவசாயிகள் தொழிற்சாலைகளுக்கு வழங்குகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும் தீர்வு இல்லை; தேயிலை வாரியம் அறிவிக்கும் பசுந்தேயிலை நிர்ணய விலை முறையாக வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட, 8 கூட்டுறவு தொழிற்சாலைகளில், கடந்த அக்., மாத விலையான, 24.59 ரூபாய் வழங்காமல் குறைத்து வழங்கப்பட்டதால், 6 நாட்களுக்கும் மேலாக அங்கத்தினர்கள், பசுந்தேயிலை வழங்காமல் போராட்டம் நடத்தினர்.
புள்ளிவிபரத்தில் தெளிவு
குந்தா கூட்டுறவு தொழிற்சாலையில் (எடக்காடு), கடந்த, 2020ம் ஆண்டிலிருந்து, 2024ம் ஆண்டு வரை குந்தா மேற்குநாடு தேயிலை விவசாயிகள் கூட்டமைப்பு எடுத்த புள்ளிவிபரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில், தேயிலை வாரியம் நிர்ணயம் செய்த மாதாந்திர தொகையிலிருந்து, கூட்டுறவு தொழிற்சாலைகள் மிகவும் குறைத்து வழங்கப்பட்டுள்ளது.
'2020ல், 18.95 ரூபாய்; 2021ல் 7.32 ரூபாய்; 2022ல், 16.52 ரூபாய்; 2023ல் 12.68 ரூபாய்; 2024ல் 11.68 ரூபாய்,' என, நிர்ணய விலையை குறைத்து வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த, 5 ஆண்டுகள் வரை ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 67.15 ரூபாய் வரை விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது.
கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் கூறுகையில், ''ஆண்டிற்கு குறைந்தபட்சம், 40 லட்சம் கிலோ பசுந்தேயிலை வரை, குந்தா கூட்டுறவு தொழிற்சாலைக்கு வழங்கப்படுகிறது. அதில், பல கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளுக்கு நிலுவை உள்ளது,'' என்றார்.
ரூ. 50 கோடி நிலுவை
தேயிலை வாரிய துணைத்தலைவர் ராஜேஷ் கூறுகையில், ''பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்காததால், 50 கோடி ரூபாய் வரை நிலுவை வைத்துள்ள, 'இன்கோ' தொழிற்சாலைகள் உட்பட சில தனியார் தொழிற்சாலைகளுக்கு வாரியம் சார்பில் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
கூட்டுறவு நிர்வாகத்தில், குறைத்து விலையை வழங்கியதால், மாநில அரசின் 'இன்கோசர்வ்' உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.