/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு அபராத தொகை
/
பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு அபராத தொகை
ADDED : பிப் 04, 2026 06:28 AM
பந்தலுார்: நெல்லியாளம் நகராட்சியில் பொதுமக்களிடம் அபராத தொகை வசூல் செய்யவதால் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
நெல்லியாளம் நகராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர், கடந்த ஆண்டு அக்., மாதம், பணி மாறுதலில் சென்றார்.
அது முதல் அந்த பதவி காலியாக இருந்த நிலையில், கோவை மாநகராட்சியில் பணியாற்றிய துப்புரவு ஆய்வாளர், நியமிக்கப்பட்டார். அவர் பணியில் சேராமலே பணி மாறுதல் பெற்றார். இதனால், நகராட்சி பகுதியில் வாழும் மக்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ், கோரி விண்ணப்பித்தும் பெற முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். தற்போது, கூடலுார் துப்புரவு ஆய்வாளராக பணியாற்றும், வீரபாகு என்பவர் கூடுதல் பணியாக நெல்லியாளம் நகராட்சியும் கவனித்து வருகிறார்.
இந்நிலையில், பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்த நபர்களிடம், காலதாமதம் என தெரிவித்து, தலா, 200 ரூபாய் அபராத தொகையினை, செலுத்த நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. துறை சார்ந்த அலுவலர் பணியில் நியமனம் செய்யாமல் அரசு தாமதப்படுத்திய நிலையில், குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர்களிடம், அபராத தொகை பெறுவது எதன் அடிப்படையில் என்று தெரியாமல் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வீரபாகு கூறுகையில், ''இது நிர்வாக ரீதியிலான நடவடிக்கையாகும். எனினும், ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

