நவீன வசதியுடன் கூடிய வாகனம்: தீயணைப்பு துறையினர் மகிழ்ச்சி
நவீன வசதியுடன் கூடிய வாகனம்: தீயணைப்பு துறையினர் மகிழ்ச்சி
ADDED : ஏப் 07, 2026 05:24 PM

கூடலுார்: கூடலுார் வனப்பகுதியில் வனத்தீயை கட்டுப்படுத்த வனத்துறைக்கு ஜெனரேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய தீயணைப்பு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
கூடலுார் பகுதியில், கோடையில் ஏற்படும் வறட்சியால் வனத்தீ அபாயம் உள்ளது. நடப்பாண்டு, கோடை மழை ஏமாற்றி வரும் நிலையில், வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. வனத்தீயை கட்டுப்படுத்த, வனத்துறையினர் வனப்பகுதியில், 590 கி.மீ., வரை தீ தடுப்பு கோடுகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். எனினும், சில பகுதிகளில் வனத்தீ ஏற்பட்டு வனப்பகுதி எரிந்து கருகியது.
இந்நிலையில், வனப்பகுதியில் வனத்தீயை கட்டுப்படுத்த, அரசு சார்பில், வனத்துறைக்கு ஜெனரேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய மினி தீயணைப்பு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனம் கூடலுார் வனக்கோட்டம் முழுவதும் விரைந்து செல்வதற்கு வசதியாக, நாடுகாணி ஜீன் பூல் தாவர மையத்தில் வைத்துள்ளனர். இதன் செயல்பாட்டை வன அலுவலர் தேவராஜ் மற்றும் வன அதிகாரிகள் ஆய்வு செய்தார்.
வனத்துறையினர் கூறுகையில், 'வனத்துறைக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள, மினி தீயணைப்பு வாகனத்தில், ஜெனரேட்டர் வசதி, 1,100 லிட்டர் தண்ணீர் டாங்க், மோட்டார் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. இதிலுள்ள மோட்டார் மூலம், குளம் மற்றும் நீர்நிலைகள் இருந்து தண்ணீரை நேரடியாக, பம்ப் செய்து, 60 மீட்டர் துாரம் வரை குழாய் எடுத்து சென்று தீயை கட்டுப்படுத்த முடியும்,'என்றனர்.
