/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பகலில் பனி மூட்டம்; சிரமத்தில் ஓட்டுனர்கள்
/
பகலில் பனி மூட்டம்; சிரமத்தில் ஓட்டுனர்கள்
ADDED : செப் 26, 2024 11:16 PM
கூடலுார்: கூடலுாரில், பகல் நேரத்தில் ஏற்படும் பனி மூட்டத்தால், ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
கூடலுார் பகுதியில், ஜூன் மாதம் துவங்கிய பருவமழையின் தாக்கம், படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், காலை, மாலையில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. அவ்வபோது பெய்து வரும் சாரல் மழையுடன், பகலில் பனிமூட்டமும் ஏற்படுகிறது. இத்தகைய மாறுபட்ட காலநிலையால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பகலில் தொடரும் பனிமூட்டம் காரணமாக, சாலையோரம் நடந்து செல்பவர்கள் கூட வாகன ஓட்டுனர்களுக்கு தெரிவதில்லை. ஓட்டுனர்கள் முகப்பு லைட்டை பயன்படுத்தி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
டிரைவர்கள் கூறுகையில், ' கூடலுாரில் கடந்த மூன்று மாதமாக தொடர்ந்த பருவமழையின் தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில், தற்போது சாரல் மழை மட்டும் அவ்வப்போது தொடர்கிறது. அதே வேளையில் மாலை, அதிகாலையில் பனிமூட்டம் ஏற்படுவதால், வாகனங்களை சிரமப்பட்டு இயக்க வேண்டி உள்ளது. இந்த சாலை வழியாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.
போலீசார் கூறுகையில்,'கடந்த சில நாட்களாக மழை மற்றும் பனியும் மாறி, மாறி வருகிறது. இரவில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால், ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்குவதன் மூலம் விபத்தை தவிர்க்க முடியும். வாகனங்களில் பகலில் 'மிஸ்ட் லைட்' பயன்படுத்தி இயக்கினால், எதிரில் வரும் வாகனங்களை எளிதாக அறிய முடியும்,'என்றனர்.