சமூக விரோதிகளால் வனத்தீ : கடும் நடவடிக்கை அவசியம்
சமூக விரோதிகளால் வனத்தீ : கடும் நடவடிக்கை அவசியம்
ADDED : ஏப் 24, 2026 06:49 PM

கூடலுார்: 'நீலகிரி மாவட்டம், கிளன்மார்கன், மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் வனப்பகுதிக்கு தீ வைக்க காரணமான, சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், கோடை மழை ஏமாற்றி வருவதால், வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பைக்காரா, கிளன்மார்கன், மசினகுடி சிங்காரா வனப்பகுதிகளில் திடீரென வனத்தீ பரவியது. 200க்கும் மேற்பட்ட வனத்துறையினர், 5 நாட்கள் போராடி கட்டுப்படுத்தினர். எனினும், 500 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி எரிந்து சாம்பலானது.
இந்நிலையில், மசினகுடி சிங்கார சாலையோர வனத்தில் ஏற்பட்ட தீயால் பெருமளவு வனப்பகுதி சாம்பலானது. வனத்துறை, தீயணைப்பு துறையினர், 10 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
வனத் தீயில், 100 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி எரிந்து சாம்பலானது. மேலும், இப்பகுதிகளை சார்ந்து வாழும் பாம்பு, உடும்பு, முயல், பறவைகள் போன்ற சிறிய வன உயிரினங்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளன. புலி, யானைகள், காட்டெருமை, கரடிகள் ஓட்டம் பிடித்தன.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில்,'வனப்பகுதி கடும் வறட்சியில் உள்ளதால், இதனை பயன்படுத்தி, வன விலங்குகளை விரட்டவும், வனத்தை ஆக்கிரமிப்பு செய்யவும் சில சமூக விரோதிகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், சிலர் விதிகளை மீறி சுற்றுலா பயணிகளை அடர்ந்த வாகனங்களில் அழைத்து செல்வதாலும் சில நேரங்களில் வனத்தீ ஏற்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு, இதற்கு காரணமான சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.
வனச்சரகர் ராஜன் கூறுகையில், ''சிங்கார சாலையை ஒட்டிய வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை முழுவதாக கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு வசதியாக, இரு நாட்களுக்கு, சிங்கார சாலையில் வாகன போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. மேலும், இங்குள்ள வாகன ஓட்டுனர்கள், தாங்கள் அழைத்து செல்லும் சுற்றுலா பயணிகள் புகை பிடிப்பது, மது அருந்துதலை அனுமதிக்க கூடாது. வனப்பகுதியில்,வனத்தீ ஏற்படுத்துவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அத்தகைய சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
