கேங்க்மேன்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்
கேங்க்மேன்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்
ADDED : செப் 04, 2026 06:41 PM
ஊட்டி:
பணியிட மாறுதல் உத்தரவு வந்து 2 மாதங்களாகியும் விடுவிக்காமல் அலட்சியமாக இருக்கும் நிர்வாகத்தை கண்டித்து ஊட்டியில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு கேங்க்மேன்கள் நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கேங்க் மேன்கள் நியமிக்கப்பட்டனர். இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் முழுவதும், 150-க்கும் மேற்பட்ட கேங்க்மேன்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் நீண்டகாலமாக தங்களது சொந்த மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்து இருந்தனர். இந்த சூழலில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கேங்க்மேன் ஊழியர்களுக்கு அவர்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவு வழங்கப்பட்டது.
ஆனால், மின்வாரிய நிர்வாகத்தினர், ஆட்கள் பற்றாகுறையை காரணம் காட்டி அவர்களின் பணியிட மாறுதல் உத்தரவிற்கு விடுவிப்பு ஆணை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சருக்கு பலமுறை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நடவடிக்கை இல்லை
இந்த நிலையில் உடனடியாக விடுவிப்பு ஆணை வழங்க கோரி சி.ஐ.டி.யு., தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பணியிட மாறுதல் உத்தரவு ஆணை விரைவில் வழங்கப்படும். என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்று போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி மத்திய பஸ் நிலைய பகுதியில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் கேங்க்மேன் ஊழியர்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி, இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
