ஊட்டியில் உற்பத்தியாகும் மலை காய்கறி விலை கிடு, கிடு உயர்வு!: பருவ நிலை மாற்றத்தால் தொடரும் பாதிப்புகள்
ஊட்டியில் உற்பத்தியாகும் மலை காய்கறி விலை கிடு, கிடு உயர்வு!: பருவ நிலை மாற்றத்தால் தொடரும் பாதிப்புகள்
UPDATED : ஜூலை 31, 2026 06:10 PM
ADDED : ஜூலை 31, 2026 05:31 PM

ஊட்டி: பருவநிலை மாற்றத்தை தொடர்ந்து, ஊட்டியில் உற்பத்தியாகும் காய்கறி வரத்து குறைந்ததால், அனைத்து வகையான காய்கறிகளுக்கும் விலை உயர்ந்துள்ளது; உள்ளூர் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரியில், கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ், பட்டாணி மற்றும் வெள்ளை பூண்டு ஆகிய மலை காய்கறிகளும், சில இடங்களில் செல்லாரி, சைனீஸ் கேபேஜ், சுக்கினி உட்பட பல்வேறு சைனீஸ் வகை காய்கறிகளும் அதிகளவு பயிரிடப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகள் மேட்டுப்பாளையம், சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை மற்றும் பெங்களூரு, கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக கொண்டுச் செல்லப்படுகிறது.
உற்பத்தி குறைவு இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மழை பொய்த்து, பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால், உருளை கிழங்கு, கேரட், பீட்ரூட், புருக்கோலி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. பொதுவாக, 10 முதல் 15 ஆயிரம் ஏக்கர் வரை, மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலையில், நடப்பாண்டு, 5 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே காய்கறி பயிரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக உற்பத்தி குறைந்து காய்கறிகளின் விலை 'கிடுகிடு'வென உயர்ந்துள்ளது. உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
8 டன் மட்டுமே வருகிறது ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா முகமது கூறுகையில், ''மழை பொழிவு இல்லாமல் வரத்து குறைந்ததால், ஊட்டி மார்க்கெட் நிலவரப்படி, உருளைகிழங்கு கிலோ, 80 ரூபாய், கேரட் 90, பீட்ரூட் 100, முள்ளங்கி, 30, முட்டைகோஸ், 40, ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியாக, 20 டன் அளவுக்கு காய்கறிகள் வரத்து இருக்கும். தற்போது, அதிகபட்சம், 8 டன் அளவுக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது,'' என்றார்.
கடனை தள்ளுபடி செய்யணும் விவசாயிகள் கூறுகையில்,'போதிய மழை இல்லாததால், மாவட்டத்தில் குறைந்த பரப்பில் மட்டுமே மலை காய்கறி பயிரிடப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு போதிய வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். காய்கறி விலை உயர்ந்தும் உற்பத்தி குறைவால் எவ்வித பயனும் இல்லை. எனவே, மாநில முதல்வர் நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் வாங்கி கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
