ADDED : ஜன 30, 2024 12:39 AM

கூடலுார்;கூடலுார் பகுதியில் 'கூகுள் மேப்' வழி காட்டியை நம்பி நடைபாதையில் கார் இயக்க வேண்டிய நிர்பந்தம் சுற்றுலா வாகன டிரைவருக்கு ஏற்பட்டது.
கர்நாடக மாநில பெங்களூரை சேர்ந்த, 5 பேர் நேற்று முன்தினம் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு, மாலை கர்நாடக செல்வதற்காக, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக, கூடலுாரை நோக்கி வந்துள்ளனர்.
இச்சாலையில், போக்குவரத்து காரணமாக, மாற்று வழி இருந்தால் செல்லலாம் என்பதை கருத்தில் கொண்டு, 'கூகுள் மேப்பை' பயன்படுத்தி டிரைவர் காரை ஓட்டி வந்துள்ளார்.
மாலையில், மேல் கூடலுார் பகுதி, தலைமை தபால் நிலையம் அருகே பயணித்த போது, கார் சென்ற சிமென்ட் சாலையில் படிகள் இருந்ததை பார்த்த அதிர்ச்சி அடைந்த டிரைவர், சுதாகரித்து காரை படியில் 'பிரேக்' போட்டு நிறுத்தினார்.
இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, காரில் இருந்தவர்கள் காயம் இன்றி தப்பினர். போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள், காரை சாலைக்கு கொண்டு வர உதவினர். தொடர்ந்து காரில் வந்தவர்கள் கர்நாடகா நோக்கி சென்றனர்.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'நீலகிரி சுற்றுலா ஸ்தலமாக உள்ளதால் 'கூகுள் மேப்பில்' உள்ள தவறுகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.