/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி ஆண்டு விழாவில் சிறுவர்களுக்கு பட்டமளிப்பு
/
பள்ளி ஆண்டு விழாவில் சிறுவர்களுக்கு பட்டமளிப்பு
ADDED : பிப் 20, 2025 10:10 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே பாட்டவயல் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஊக்கமளித்தனர்.
பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின், 63வது, ஆண்டு விழா, விளையாட்டு விழா, பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் கோவிந்தராஜ் வரவேற்றார். பெற்றோர் - ஆசிரியர் சங்க தலைவர் ஸ்ரீஜேஸ் தலைமை வகித்தார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவி மினி, உறுப்பினர்கள் முகமது அஷ்ரப், அனீஸ் ஜோசப், துணைத் தலைவர் இந்திரா காந்தி ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, முன்னாள் தலைமை ஆசிரியர் பி.பத்மநாபன், பந்தகாப்பு பள்ளி தலைமை ஆசிரியர் மல்லேசன், பிதர்காடு பள்ளி தலைமையாசிரியர் பத்மநாபன் ஆகியோர் அரசு பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க வேண்டிய அவசியம் குறித்து பேசினர்.
பள்ளி தலைமை ஆசிரியை பூபதி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். வட்டார கல்வி அலுவலர் வாசுகி பேசுகையில், ''அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தருவதுடன், திறன்மிக்க ஆசிரியர்கள் கல்வி கற்பித்து தருகின்றனர்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தற்போது, பல்வேறு துறைகளில் சாதித்து வருவது இதற்கு சான்றாக உள்ளது. எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை தினசரி அரசு பள்ளிகளுக்கு அனுப்ப முன் வர வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், கோவை துாரிகை அறக்கட்டளை, பள்ளி நிர்வாகம் இணைந்து, யு.கே.ஜி., மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி அவர்களுக்கு ஊக்கம் அளித்தனர். கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. ஆசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்.