/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் பலத்த மழை; சுற்றுலா தலங்கள் மூடல்
/
நீலகிரியில் பலத்த மழை; சுற்றுலா தலங்கள் மூடல்
ADDED : ஜூன் 17, 2025 01:00 AM

ஊட்டி; நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக, அவலாஞ்சியில், 29, அப்பர் பவானி, 16, பந்தலுார், 13 செ.மீ., மழை பதிவானது.
நேற்று அதிகாலை முதல் ஊட்டியில் தொடர் மழை பெய்து வருவதால், குந்தா, ஊட்டி, கூடலுார், பந்தலுார் ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணியர் குறைந்து காணப்பட்டனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, தொட்டபெட்டா, அவலாஞ்சி, பைன் பாரஸ்ட், கேர்ன்ஹில் பகுதி, ஒன்பதாவது மைல் ஷூட்டிங் மட்டம் பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
ஊட்டியின் சுற்றுப்புற பகுதிகளில் விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் அகற்றினர். மஞ்சன கொரை சாலை விரிவாக்க பணி நடக்கும் இடத்தில் மண்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதே போல, கோவை மாவட்டம், வால்பாறையில், நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.