/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜெகதளாவில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்
/
ஜெகதளாவில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்
ADDED : ஜன 20, 2025 10:43 PM

குன்னுார்; குன்னுார் கிராமத்தில் படுகர் இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் படுக இன மக்கள் ஆண்டுதோறும் டிச., ஜன., மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதில், ஜெகதளா ஆறு ஊர் மக்களால் கொண்டாப்படும், இந்த பண்டிகை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
இந்நிலையில், திருவிழாவுக்காக கடந்த, 48 நாட்கள் விரதம் மேற்கொண்ட ஹெத்தைக்கா ரர்கள், தாய் வீடான கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய உடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறினர்; காரக்கொரையில்பூ குண்டம் இறங்கினர்.
நேற்று கன்னி ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள ஜெகதளாவில் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவிலில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பாரம்பரிய சேலை அம்மனுக்கு சார்த்தப்பட்டது. 'மடியரை' என, அழைக்கப்படும் பாறை ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து, துவங்கிய அம்மன் ஊர்வலத்தில், ஹெத்தை தடிகள், வண்ண குடைகளுடன் ஹெத்தைக்காரர்கள், பங்கேற்றனர்.
அதில், குடைகள் புடைசூழ, ஆடல் பாடல்களுடன் ஹெத்தை அம்மனை பூசாரி தனது தலையில் சுமந்தவாறு வந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. சிறுமியர் பாரம்பரிய உடை அணிந்து ஹெத்தையம்மனாக பாவித்து ஊர்வலத்தில் முன்னதாக வந்தனர். வரும் வழியில் வேட்டிகளை விரித்து, அதன் மீது நடக்க வைத்தனர்.
ஜெகதளா ஹெத்தை கோவிலில் சுத்தக்கல்லில் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பாரம்பரிய வெள்ளை உடை அணிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பாரம்பரிய நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.