ADDED : ஜன 25, 2024 12:10 AM
அன்னுார் : கெம்பநாயக்கன் பாளையத்தில், கிளை தபால் அலுவலக கட்டடம் திறப்பு விழா நடந்தது.
கெம்பநாயக்கன்பாளையத்தில் கிளை தபால் அலுவலகம் சிறிய வாடகை கட்டடத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. விசாலமான சொந்த கட்டடத்தில் தபால் அலுவலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல வருடங்களாக கோரி வந்தனர்.
இதையடுத்து ஜெம் எடிபிள் ஆயில் நிறுவனம் சி.எஸ்.ஆர்., நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கியது. இந்த நிதியில் கெம்ப நாயக்கன் பாளையத்தில் தபால் அலுவலகத்திற்கு கட்டடம் கட்டப்பட்டது. சமுதாய நலக்கூடத்தில் மேற்கூரை சீரமைக்கப்பட்டது.
தபால் அலுவலக கட்டடம் திறப்பு விழா நடந்தது. ஜெம் நிறுவன சேர்மன் சின்னதுரை புதிய கட்ட டத்தை திறந்து வைத்தார். பெயர் பலகையை ஊராட்சித் தலைவர் தங்கராஜ் திறந்து வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால், துணைத் தலைவர் குருதாசல மூர்த்தி, உதவி கோட்ட கண்காணிப்பாளர் அசோக் குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.