ADDED : பிப் 08, 2024 10:31 PM

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காட்டில் கோடைக்கால வெப்பம் அதிகரித்துள்ளதால், தாகம் தணிக்க மக்கள் தர்பூசணியை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காட்டில் சமீப நாட்களாக கோடை காலம் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் தாகம் தணிக்க தர்பூசணியை அதிகம் விரும்புகின்றனர். பல்வேறு வகை தர்பூசணி பழங்கள் பாலக்காடு சந்தைக்கு வரத் துவங்கியுள்ளன. மாவட்டத்தின் முக்கிய சாலை ஓரங்களில் தர்பூசணி விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது.
இதுகுறித்து தர்பூசணி மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து, தர்பூஸ், கிரண், விஷால் ஆகிய ரக தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இரண்டு முதல் 12 கிலோ எடையில் தர்பூசணி பழங்கள் உள்ளன. தமிழகத்தில், பொள்ளாச்சி, பழநி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து தர்பூசணி பழங்கள் கேரளாவுக்கு கொண்டு வரப்படுகின்றன. கிலோ, 20 முதல் 22 ரூபாய் வரை தற்போது விற்கப்படுகிறது. எடை குறைந்த தர்பூசணி பழங்கள், 18 முதல் 20 ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன. கடந்தாண்டு, கிலோ, 15 முதல் 20 ரூபாய்க்கு விற்ற தர்பூசணி பழங்கள், இந்த சீசனில் விலை அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில், கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்தும் அதிகளவில் தர்பூசணி விற்பனைக்கு வரும்.
பாலக்காடு நகரிலும் சுற்று பகுதிகளிலும், மொத்த வியாபாரிகளிடமிருந்து, தினமும் சராசரியாக, மூன்று முதல் 8 டன் வரை விற்பனை நடக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

