/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் நகை, பணம் கொள்ளை
/
அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் நகை, பணம் கொள்ளை
ADDED : பிப் 16, 2024 12:12 AM
மேட்டுப்பாளையம்;காரமடை வசந்தம் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர், 58. இவர் மின்வாரியத்தில் போர்மேனாக அன்னூர் கிளையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி, 50. இவர்களுக்கு இருமகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு வரும் ஜூன் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று மதியம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து, வீட்டில் இருந்த அனைவரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்றனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் மூன்று பேர், ஒரே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்து சந்திரசேகர் வீட்டின் முன்பக்க காம்பவுண்ட் கேட்டை ஏறி குதித்து உள்ளே சென்றனர்.
வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.8 லட்சம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்தனர். அங்கிருந்த தப்ப முயன்ற போது அருகில் உள்ளவர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது பைக்கில் இருந்தவாறு கத்தியை காட்டி மிரட்டி தப்பிவிட்டனர்.
அதன்பின்னர் இவர்கள், அருகில் உள்ள அர்ச்சனா கார்டன் பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியர் பிரகாஷ், 41, என்பவரது வீட்டிலும், கதவை உடைத்து சுமார் 4 சவரன் தங்க நகைகள், ரூ. 11,000 கொள்ளையடித்தனர்.
மேலும் அதே பகுதியில் தனியார் பள்ளியின் ஆசிரியரான விக்டர், 48, என்பவரது வீட்டிலும் இவர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். அக்கம்பக்கத்தினர் திரண்டு வரவே அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
சம்பவ இடங்களுக்கு தடயவியல் துறையினருடன், போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.---